

விடியும் நேர இருட்டு. ஊரு இப்பத்தான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பிச்சிருக்கு. வெளியே கலவையான சத்தங்கள். ரொம்ப நேரமா காக்கா ஒண்ணு ஒத்தையாய் முருவன் வூட்டு கூரைமேல குந்திக்கிட்டு உசுரு போறாப்பல கத்திக்கிட்டே கெடக்குது. முருவன் பொண்டாட்டி கஸ்தூரி கை வேலையை அப்படியே விட்டுப்புட்டு ஓடிப்போயி "ச்சூ..ச்சூ'ன்னு துரத்திட்டு வர்றா. ஊஹும் திரும்பவும் வந்து அதே இடத்தில குந்திக்கிட்டு அதே கத்தல்.
"ஏம்மே தே இன்னா இந்த காக்கா செனியன் வூட்டுக்கு வடவாண்ட மூலையில குந்திக்கினு இப்பிடி கத்தித் தொலைக்குது. எதனா எழவு சேதி வருதா?''
இவ வாய்க்கு சர்க்கரைதான் போடணும். சொன்னாப்பல அன்னைக்கி காத்தால ஏழு மணிக்கெல்லாம் முருவன் வீட்டுக்கு சாவு செய்தி வந்துடிச்சி. அடச்சே, காக்கா ஒரு செய்தி சேனல்னு, இப்பத்தான தெரியுது. தகவலு வந்து ஒரு மணிநேரமாச்சி. ஆனா இன்னும் அந்த வீட்டில யாரும் கிளம்பறாப்பல தெரியலியே.
"ஏய் இன்னாடீ? என் அத்தை மண்டையப் போட்டுடுச்சின்னு சொல்றேன். பெரிய சாவு. நீ இன்னாடான்னா நான் வரலேன்னு சொன்னதையே சொல்லிக்கினு கீற.'' "ஆமா... நீ இன்னா சொன்னாலும் சரி, நானு வர்லே'' "அடீங்... அதான் ஏன்டீ... அங்க உன் அண்ணங்காரன் மொவத்தில முழிக்கணும் அதான?''
"தெரியுதில்ல, பின்ன இன்னாத்துக்கு ஏடிச்சி ஏடிச்சி கேக்கற.''
"போடீ முண்ட இப்படியே ஒரே முட்டா உன்
வூட்டு ஜனத்த அறுத்து வுட்ருவியா? இன்னா, சொல்லு''
"இன்னா... இப்ப என் வாயப் புடுங்கறீயா? இனிமே இன்னா கெடக்குது சொல்லு. பொறந்த வூட்டு வழி அன்னியோட எனுக்கு அத்துப் போச்சிமே''. ஐயோ எப்பா எப்பாடீ.. என்ன இப்படி அநாதையா வுட்டுப்புட்டு பூட்டியே'' சத்தம் போட்டு ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சிட்டா.
"அடச்சீ வாயை மூட்றீ. தோ பாரு சாவு வூட்டுக்குப் போய் வந்துடலான்டீன்றேன். சண்டித்தனம் பண்ணிக்கிணு நிக்கிற. சொன்னா கேள்றீ, பெரிய சாவுடீ. கௌம்பு ஜல்தி''
"ஏன் என் உசுர இப்படி வாங்கற? சரி, போனமா வந்தமான்னு இருக்கோணும்''
"ஏய் இன்னாடீ ரேங்கற? இது சம்பந்தி வூட்டு சாவுடீ, நாம சம்பந்தம் கட்டணும். இன்னைக்கி பொணத்த எடுத்தப்புறம் போட்ற சோறு நம்மளை மாதிரி கொண்டான் குடுத்தானுங்க செலவுதான்டீ... தெர்தா? முன்னல்லாம் அரிசி பருப்பு வாங்கிக் கொடுத்து முட்டுத்தளி மூட்டி சோறு ஆக்கிப் போட்டோம். இப்பல்லாம் யாரு ஆக்கறான். இத்தனை சாப்பாடுன்னு ஓட்டல்ல சொல்லி பணம் கட்டிப் புட்டா, வந்து எறங்கிப் புடுது. ஆனா பந்தி பரிமாறுறது மட்டும் சம்பந்தி வூட்டு ஆளுங்க தான்டீ தெரிஞ்சிக்கோ. இருந்து பரிமாறிட்டு வரணும். அதான் மொறை. நாமளும் எல்லாத்தையும் முடிச்சிட்டுத்தான்டீ திரும்பணும் தெர்தா?''
"சரி அங்க போனா எங்க வூட்டுப் பக்கம் திரும்பிக் கூட பாக்க மாட்டேன்... ஹக்காங்... "அங்க வந்து ஊரு ஒலகத்துக்கோசரம் ஒரு எட்டு போயி பார்த்துப்புட்டு வந்துட்லாம்டீன்னு என் உசுர வாங்கக் கூடாது''
அவள் கறாராய்ச் சொல்லி விட்டாள்.
"ஆங் நாந்தான் போயி மெலாந்துக்கப் போறன். உனுக்கே இல்லன்னா எனுக்கு இன்னாடீ சொட்டுதா. அன்னிக்கி உங்க சண்டையில் அவனுக்கு எம்மாம் தாந்தலு இருந்தா அந்த நோஞ்சான் பாடூஸ் பையன் என் மேலயே கைய வெப்பான்.. பதிலுக்கு நானும் கைய வெச்சிருந்தா ரெண்டு அடி தாங்கியிருப்பானாடீ.
ஒறவா பூட்டானேன்னு வெச்சிப் பார்த்தேன். இல்லாட்டி அன்னிக்கே அவன் எலும்பை பொட்டலம் கட்டிட்டிருப்பேன்... ஆமா'' முருவன் ஆத்திரமா கத்தினான். முருவன் அதுக்கேத்தாப்பல கட்டுமஸ்தான ஒடம்புக்காரன்தான்.
ஒரு வழியா சள்ளையான அவங்க பேச்சு முடிஞ்சி அவனுடைய டிவிஎஸ்50 கிளம்பறப்போ காத்தால ஒன்பது மணி ஆயிப்போச்சி. ஊர்... பிரம்மதேசம். ராஜராஜ சோழனின் அக்கா குந்தவையின் கணவன் வானவர்குல வல்லவராயன் வந்தியத் தேவன், தொண்டை மண்டலத்தில ராஜாவாக ஆட்சி செய்த ஒரு சின்ன நாட்டுக்கு தலைநகரம் பிரம்மதேசம் என்ற ஊராம். அது ஆற்காட்டுக்கு பக்கத்திலதான் இருக்குது. சரித்திரப் பெருமை வாய்ந்த அதே பிரம்மதேசத்தில்தான் முருவனுடைய அத்தையை குடுத்தது. அதேஊர்லதான் இவனுக்கும் பொண்ணெடுத்தது. இங்கிருந்து பதினாறு கிலோமீட்டர் தூரம்.
கஸ்தூரி இவ்வளவு கண்டீசனா பிறந்த வீட்டு மேல வெறுப்பு காட்றதுக்குக் காரணம், சொத்து தகறாரு. கஸ்தூரியும் அவள் அண்ணங்காரன் குமாரும்தான் அவங்க வூட்டுக்கு வாரிசுங்க. அவங்கப்பன் உயிர் விட்றப்ப கஸ்தூரி கையப் புடிச்சி குமாரு கையில குடுத்து பாத்துக்கோன்னு சொல்லிப்புட்டு கண்ணீர் விட்டாரு. அப்ப ரெண்டு பேரும் அப்பிடி அழுதாங்க. அப்புறம் பலவீனமான குரல்ல...
"டேய் குமாரு... ஏரிக்குக் கீழ மொத மடையில பச்சம்மா கோவிலாண்ட இருக்கிற எழுபது சென்ட்டு தளைய கஸ்தூரிக்கு வுட்ரு. அப்புறமா எழுதி குடுத்துருடா'' என்று சொல்லிட்டு கண்ணை மூடிட்டாரு. ஆனா அவன் இன்னைக்கு வரைக்கும் அதை செய்யல. அதுக்கப்புறம் குமாரு போக்குல வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சிது. இதோ அதோன்னு ஒரு வருசமா தாத்து மாத்து சொல்லிக்கிட்டே இருந்தான். ஒரு நாள் கஸ்தூரியும், முருவனும் அவனை நிற்க வெச்சி கேட்கிறப்போ குடுக்க முடியாதுன்னு தெளிவா அறுத்துச் சொல்லிப்புட்டான்.
"என்னமோ நஞ்சையில அம்பது ஏக்கரா, புஞ்சையில அம்பது ஏக்கரான்னு சம்பாரிச்சி வெச்சமாரி போற போக்குல அந்தக் கெயவன் சொல்லிப்புட்டா, அப்புறம் நானு தலையில துண்டை போட்டுக்குணு போறதா.. அப்புறம் எனுக்கு மிச்சம் இன்னா கீது சொல்லு. இந்த ஒழுகலு வூடும், மூணு ஏக்கரா மோட்டாங்காலு நஞ்சையும்தான. வருசத்தில நல்லா மழை பேஞ்சி ஊர்ல மூணு போகம்னு அறக்கற அன்னைக்கி கூட எனுக்கு மட்டும் ஒரு போகம்தான் கிட்டும். ரெண்டாம் போகத்துக்கே தண்ணி எட்டாது. அம்மாம் மோடு. அத்த வெச்சிக்கிணு நாக்கைதான் வழிக்கணும். ஆமா இந்த சொத்துக்களை வாங்கினதுல எனுக்கு பங்கு இல்லியா இன்னா? மொத்தத்தையும் அந்தாளே சம்பாரிச்சிட்டானா? பத்து வருசமா நானுந்தான கழனிக்காட்ல ஒழைச்சேன்.''
அதைக் கேட்டு முருவனுக்கே கோவம் வந்திடுச்சி. சரி அவனே மவராசனா வாழட்டும், நமக்கு அந்த சொத்து வேண்டாம்னு பெருந்தன்மையா சொல்லிட்றதுக்கு இவனும் ஒண்ணும் புளியேப்பக்காரன் இல்லை. கை உழைச்சாத்தான் கஞ்சி என்ற நிலைமை. ஆனா அதுக்காக மச்சான் கிட்ட போயி பிச்சை கேட்கிற மாதிரி கெஞ்சிக்கிட்டு கிடக்க அவனுக்கு சுய கவுரவம் இடம் கொடுக்கல, மானஸ்தன். பார்த்து பார்த்து ஒரு நாள் பொண்டாட்டி கிட்ட அறுத்து சொல்லிட்டான்.
"ஏய் அந்தக் கர்மத்த வுட்டுத் தொலைடீ. அந்த சொத்தை பார்த்தா எங்கப்பன் ஆத்தா என்னை பெத்துப் போட்டாங்க. வுடுமே. தோ பார்றீ... அவன் இன்னமோ நெனைச்சிங்கீறான். அசடா இருந்து கெட்டவனும் இல்ல, சமத்தா இருந்து வாழ்ந்தவனும் இல்லடீ, தெர்தா?'' ஆனா கஸ்தூரி இதை விடுவதாக இல்லை.
"ஆங்... இவனை மட்டும்தான் எங்காத்தா பெத்தாளா? என்னை காக்கா தூக்கியாந்து போட்டுச்சா? சொல்லு. எங்கப்பன் சொல்லிட்டு போனதுக்காவ கம்னு போறேன், இல்லாங்காட்டி கோர்ட்டுக்குப் போயி எல்லாத்திலியும் சரி பாதிய பொளந்து வாங்கியாற தெரியும் எனுக்கு'' என்று சட்ட பாயிண்ட்டை பேச ஆரம்பிச்சாள்.
இவளுக்கு எடுத்துக் குடுத்து ஊதி ஊதி பெருசாக்கி அதுல குளிர் காய அக்கம் பக்கத்தில நாட்டு வக்கீல்களுக்கா பஞ்சம்? அதுக்கப்புறம் ஒரு நாள் கஸ்தூரி கடைசியாக அண்ணங்காரன் கிட்ட நேர்முகமா கேட்டுட்றதுன்னு புருசனை இழுத்துக்கிட்டு, பஞ்சாயத்து பண்றதுக்கு ஊரிலிருந்து முக்கியஸ்தர்கள் ரெண்டு பேரை கூட்டிக்கிட்டு நேரா போயிட்டா. அன்னைக்குத்தான் விவகாரம் சிக்கலாயிப் போச்சி. அன்னைக்குத்தான் மச்சானுங்க ரெண்டுபெரும் அடிச்சிக்கிட்டாங்க. குமாருக்கு சப்போர்ட்டா பத்து வீட்டு பங்காளிங்களும் திமு திமுன்னு வந்துட்டானுங்க. இவளுக்கும் ரெண்டு அடி விழுந்துச்சி. அத்தோட பிரிஞ்சவங்கதான், அஞ்சி வருசமாச்சி. போக்குவரத்து இல்லாம போச்சி. இடையில கஸ்தூரியின் பொண்ணு ஜோதி பெரிய மனுஷியாகி தடபுடலா சடங்கு செஞ்சாங்க. தாய் மாமன் இருந்து செய்யணும். முருவனுக்கும் மச்சானை கூப்பிடணும்னுதான். ஆயிரம் இருந்தாலும் உறவை விட்றக் கூடாது. ஆனா கஸ்தூரி எடங் குடுக்கல.
"தோபாரு வாணான்டீ. குத்தம் பாத்தா ஒறவு இல்லன்னு பெரியவங்க இன்னாத்துக்கு சொல்லி வெச்சிக் கீறாங்க?''
அவ எதுக்கும் அசைஞ்சி கொடுக்கல. அதேசமயம் அந்த சம்பவத்துக்கு அப்புறம் குமாரும் தன் பெண்ணை அந்தியூரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் பண்ணியிருக்கிறான். பையனுக்கு அரசாங்க வேலையாம்.
நிச்சயதார்த்தத்தை தடபுடலா நடத்தினான்னு கேள்வி. ரெண்டு ஸ்வீட்டு, மூணு பழ தினுசு, நாலைஞ்சி பதார்த்தங்க, ஐஸ்க்ரீம், பீடான்னு அமர்க்களப்படுத்திட்டானாம். "சாப்பாட்டு எல ஒவ்வொண்ணும் நூத்தம்பது ரூபா தாளுமாம். கூடப் பொறந்தவள ஒரு வார்த்த கூப்பிடல. கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி மாளல. கஸ்தூரி ரெண்டு நாளும் அழுத கண்ணும், சிந்திய மூக்குமா கிடந்தா.
"வுட்றீ மொதல்ல நாமதானே வழி காட்டிப்புட்டோம்''
இவர்கள் போயி பிரம்மதேசத்தில் மேலத்தெருவுல நுழையறப்போ மதியம் பதினோறு மணி ஆயிப்போச்சி. கஸ்தூரி வழியேற அண்ணங்காரன் குடும்பத்தில யாரு முகத்திலேயும் முழிக்கக் கூடாதுடா சாமீன்னு வேண்டாத தெய்வமில்ல. இனி இந்த ஜென்மத்துக்கு அவனப் பார்க்கக் கூடாது. ஆனால் இந்த வூட்டுக்கார பாவி நேரா அவள் அண்ணன் வீட்டுக்கு நேரா எதிர் வாடையிலா வண்டிய கொண்டு போயி நிறுத்துவான்? அடப்பாவி அவனைக் கிள்ளிப் பார்த்தாள், ரகசியமா முறைச்சிப் பார்த்தாள். அவன் வண்டிய ஸ்டேண்டு போட்டு நிறுத்திட்டு அவள் கிட்ட ரகசியமாக,
"இப்ப போனா சவத்த எடுத்துட்டு கௌம்ப இருட்டிப்புடும். அங்க கும்பல் ஜாஸ்தியா இருக்கும். கும்பல்ல எவன்னா நம்ம வண்டிய லவட்டினாக் கூட தெரியாதுடீ. இங்க வுட்டாதான் பாதுகாப்பு தெர்தா. நான் இன்னா உங்கண்ணன் வூட்லயா வண்டிய வுட்றேன்.'' சொல்லிவிட்டு நிமிர்ந்து வாசல்ல யாராவது இருக்காங்களான்னு பார்த்தான். யாருமில்ல. ஆனா வர்றப்பவே நோட் பண்ணிட்டான். உள் வராண்டாவில
நின்னுக்கிட்டிருந்த அவன் மச்சான் குமாரு இவங்க வர்றத பார்த்துப்புட்டு சடுக்குனு தலையை உள்ளே இழுத்துக்கிட்டான். "ஹும் இவங்க குடும்பத்துக்கே சுட்டுப் போட்டாலும் அந்தளவு பெருந்தன்மை வராது. என்னடா அப்பிடி சண்டை போட்டவங்க நம்ம வாசல்ல வந்து நிக்கிறாங்களேன்னு டக்குனு வெளியே வந்து வாங்கன்னு கூப்பிட்டிருந்தா அது மனுசத்தனம். த்தூ...' அவன் பூமாலையை எடுத்துக்கிட்டு முன்ன நடக்க, பின்னாலயே மொணமொணன்னு அவனை திட்டிக்கிட்டே கஸ்தூரி நடந்தாள்.
அத்தையின் பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்ல வசதி. ஒருத்தன் வருவாய் துறையில அதிகாரி, இன்னொருத்தன் ஆளுங்கட்சியில கவுன்சிலரு. கும்பலுக்குக் கேக்கணுமா? தெருவை அடைச்சி பெருசா ஷாமியானா பந்தல் போட்டு, வெளியே வாசல்ல வரிசையாக சேர்களில் ஜனங்க ஊரு கதையைப் பேசிக்கிட்டிருக்குதுங்க. பறை சத்தம் கணகணவென்று பொரிகிறது. பறையடிப்பவர்கள் ஒவ்வொரு வசதியான பார்ட்டியாகப் பார்த்து கிட்ட போயி ஒப்பாரி பாடி அவங்க பேருக்கு சுபோஜெயம் சொல்லி, டாஸ்மாக் கடைக்கு துட்டு தேத்திக் கிட்டிருந்தாங்க. பக்கத்து வூட்டு வெளி திண்ணையில முக்கியஸ்தர்கள் உக்காந்து ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. எதிரே தெருவுல பாடை தயாராயிக்கிட்டிருந்துச்சி. சவத்தருகே உட்கார்ந்திருக்கிற பொண்டுகளுக்கு குண்டான்களில் காபி போய்க்கிட்டிருந்துச்சி. அத்தை சாவறப்ப 65 வயசு. ஷுகர், ரத்தக் கொதிப்பு. வயசான சாவுன்றதால வர்றவங்க ரெண்டு வரி பாடி அழுவுறதைத் தவிர, மத்தபடி எல்லா பொண்டுகளும் அமைதியாத்தான் உட்கார்ந்து கிசுகிசுன்னு சொந்தக் கதைய பேசிக்கிட்டு இருந்திச்சிங்க. இவங்க ரெண்டு பேரும் போயி சவத்துக்கு மாலையப் போட்டுட்டு நின்னாங்க. முருவன் பிணத்தருகில் நின்னு கண்ணைக் கசக்க, அவள் "தப் தப்'னு மார்ல அறைஞ்சபடியே பொண்டுக நடுவுல உக்காந்து அழ ஆரம்பிச்சா. தன் பொறந்த வூட்டு ஒறவு அத்துப் போனதை நெனைச்சாள், அவ்வளவுதான் மாலை மாலையாய் கண்ணீர் வடிய ஒப்பாரிப் பாட்டு பீறிட்டுக் கிளம்புச்சி.
கஸ்தூரியின் ஒப்பாரி அழுகைதான் அங்கே கணீர்னு எடுப்பாக இருந்துச்சி. முருவன் போயி சோகமாய் உட்கார்ந்திருந்த மாமாவையும், அவருடைய பிள்ளைகளையும் பார்த்து ரெண்டுவார்த்தை பேசிட்டு, சம்பந்த சாப்பாடு பற்றி மற்ற சம்பந்திகளிடம் கலந்து பேசி தன் பங்கு ஐந்நூறு ரூபாயை கொடுத்துட்டு, ஜவுளிக் கடைக்கு கிளம்பினான். பிறந்த வூட்டு கோடி போடணும்.
ஆச்சு. நொந்த உடம்புன்றதால சாயரட்சை மூணு மணிக்கெல்லாம் சவத்தை குளிப்பாட்டி பாடைய கிளப்பியாச்சி. பாடையின் பூ ஜோடிப்பு அலங்காரத்திலும், வான வேடிக்கைகளிலும்,சங்கு முழங்க, சேகண்டி சத்தத்திலும், பொரிந்து தள்ளும் இரண்டு செட்டு சாவு மேளம், கூடவே சுடலை வரைக்கும் வந்த ஜனக் கூட்டம். இவைகள் அத்தை புள்ளைகளின் வசதிகளையும், ஊரில் அவர்களுக்கு இருக்கும் சாய்க்காலையும் தெரிவித்தன. சவத்தை சுடலைக்கு கொண்டு போயாச்சி. சுடுகாட்டில அரிச்சந்திரன் அகவல் முதல் கொண்டு எல்லாச் சடங்குகளையும் முடிச்சி சவத்த எரியூட்டும் போது பிள்ளைகள் ரெண்டு பேரும் அப்படி அழுதாங்க. அம்மாவுடனான அவங்களுடைய பால்ய காலம் நினைப்புக்கு வந்து விட்டிருக்கும். பிற்பாடு முருவன் மத்தவங்களோடு சேர்ந்து அங்கியே ஏரியில குளிச்சிட்டு வந்தான். கஸ்தூரியும் அத்தை வீட்டிலியே குளிச்சிட்டு தலைய விரிச்சிப் போட்டுக்கிட்டு காத்திருந்தா. ஆச்சு, சுடலைக்கு போனவங்க வந்து சேர்ந்தாச்சி. மளமளன்னு இலை போட்டு பந்தி பரிமாற ஆரம்பிச்சாச்சி. முருவனும், கஸ்தூரியும் ஓடி ஓடி பரிமாறினாங்க.
எல்லாரும் சாப்பிட்டு முடிக்க, பந்தி பரிமாறினதில முருவனுக்கும், கஸ்தூரிக்கும் சாப்பிட பிடிக்கல. கொஞ்சமாக ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பிட்டாங்க. அவசர உலகத்தில இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலுன்றதெல்லாம் ஏறக்குறைய அத்துப்போச்சி. இப்பல்லாம் உடன் பாலும் வெச்சிட்றதுதான் வழக்கமாகிப் போச்சி. கிளம்பறப்போ கஸ்தூரிக்கு கவலை வந்து ஒட்டிக்கிச்சி. "ஐயோ எனுக்குன்னு வாய்ச்ச இந்த பாவியால நாம எங்க போகக் கூடாதுன்னு வைராக்கியமா இருக்கிறமோ அந்த இடத்துக்கே போறாப்பல ஆகிப்போச்சே. அங்க போயி வண்டிய கிளப்பணும். ஹும்... மானங்கெட்ட ஜென்மம். பாவி மனுசன் அங்க போயா வண்டிய நிறுத்துவான்? காங்கியாத்தா எம்மாடீ எல்லையத் தாண்டுற மட்டும் கூடப் பொறந்தவன் மொவத்திலியே நானு முழிக்கக் கூடாதுடீ தாயீ. இத்தோட சரி... இந்தப் பக்கமே தலை வெச்சி படுக்கமாட்டேன்டீ எம்மா..'' வண்டியை எடுக்கும்போது அவள் அடித் தொண்டையில் சீக்கிரம் சீக்கிரம்னு அவனை தாத்து கோல் போட்டுக்கிட்டே இருக்க, அவனும் மாய்ஞ்சி மாய்ஞ்சி உதைக்க, ஊஹும்... இப்ப பார்த்து சோதனையா வண்டி ஸ்டார்ட் ஆவல. பளீர்னு தெரு விளக்கு வெளிச்சம் அவங்க இருப்பை காட்டிக் குடுத்துக்கிட்டு இருக்குது. அவள் நெருப்பு மேல நிற்கிறாற் போல நெளியறா. நல்ல வேளையாக அவங்க யாரும் வெளியில தென்படல. அவனும் "ச்சேச்சே..' ன்னு வண்டிய திட்டிக்கிட்டே உதைக்கிறான். வியர்வை கொட்டுது. எல்லாம் வியர்த்தம். கஸ்தூரி நிக்கமாட்டாமல்.
"தே... என்னால இங்க நிக்க முடியாது. நானு நடந்து போய் தெருக் கோடியில நிக்கிறேன். நீ வண்டிய கௌப்பிக்கிணு வா''
யாரோ அவள் கையை அழுத்தமா பிடிச்சாங்க. திரும்பினாள். குமாரு அண்ணன், கூடவே அண்ணிகாரியும் நிற்கிறாள். அண்ணன் கண்ணில் கண்ணீர்.
"கண்ணே கஸ்தூரி உள்ள வாம்மா'' கஸ்தூரி அவன் பார்வையைத் தவிர்த்து விட்டு எங்கியோ தூரமாய் பார்த்தபடி கறாராக.
"இ..இல்.ல..நாங்க கௌம்பறோம். இருட்டிப் போச்சி'' அண்ணியும்வந்து இன்னொரு கைய பிடிச்சிக்கிட்டாள்.
குமாரு திரும்பி மச்சான் கையைப் புடிச்சான்.
"மச்சான் ஏதோ எனுக்கு புத்தி கெட்டுப்போயி அன்னைக்கு சண்டை போட்டேன். தப்புதான், மன்னிச்சிடு. நடந்ததை மறந்துட்டு உள்ள வா மச்சான்''
ரெண்டு பேருக்கும் நடக்கிறது ஒண்ணும் புரியல. விசேஷத்தில எல்லாம் தள்ளிப்புட்டு இது என்ன புதுத் திருப்பம். முருவன் வீராப்பா முறைச்சிக்கிட்டு நின்னான்.
"இருக்கட்டும்பா, எப்பவும் கொஞ்சம் எட்டக்க இருந்தாத்தான் மரியாதை. இன்னா, கிட்டக்க வந்து அசிங்கப்பட வாணாம் பாரு. நாங்க கௌம்பறோம். இருட்டிப் போச்சில்ல. வூட்ல கொழந்தைங்க தனியா இருக்கும். இந்நேரம் பார்த்து இந்த வண்டி மக்கர் பண்ணுது. ஸ்டார்ட் ஆயித் தொலைக்கல. சீக்கிரமே இத்த வித்துத் தொலைச்சிடணும். சனியன்.''
"நான் மெக்கானிக்கை கூப்பிட்றேன் மச்சான். நீங்க ரெண்டு பேரும் உள்ள வாங்க.''
"இல்ல.. இல்ல மெக்கானிக்லாம் வாணாம்பா. கொஞ்ச நேரம் வுட்டு ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆயிரும்.''
"சரி ரெண்டு பேரும் உள்ள வாங்க. கண்ணே கஸ்தூரி டேய் உள்ள வாடா''
கஸ்தூரி அசையவில்லை. புருசனைப் பார்க்கிறாள். தவிர்க்க முடியாதபடி முருவனை குமாரு வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றான். கஸ்துரியை அண்ணிக்காரி பிடித்துக் கொண்டாள். உள்ளேயிருந்து சிரிப்புடன் ஓடிவந்த பெரிய பொண்ணு கெüசல்யா, "வாங்க அத்தை, வாங்க மாமா'' ன்னு பாசமா கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் தட்டில சுடச் சுட உளுந்து வடைய கொண்டு வந்து வைத்தாள். தொட்டுக்க கார சட்னி. இவளுக்குத்தான் தடபுடலான நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்குது.
"என்ன இந்நேரத்துக்கு சுடச் சுட உளுந்து வடை, வூட்ல எதுவும் விசேஷமா?''என்ற முருவனின் கேள்விக்கு கஸ்தூரியின் அண்ணிதான் பதில் சொன்னாள்.
"ஒரு விசேஷமும் இல்லேண்ணா நீங்க ரெண்டு பெரும் வந்திருக்கிறத பார்த்துப்புட்டுத்தான், கஸ்தூரி உளுந்து வடையும், கார சட்னியும்னா உசுர வுட்ருவா, சீக்கிரமா செய்யின்னு சொன்னாங்க. அதான்.''
முருவன் ஓரக்கண்ணால் பொண்டாட்டிய பார்க்க, குபுக்கென்று அவளுக்கு கண்ணீர் பொத்துக்கிட்டது. ஏற்கெனவே உடைந்து உதிரும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அண்ணங்காரன் கண்ணே டேய் கஸ்தூரி வாடான்னு அதே பழைய வாஞ்சையுடன் கூப்பிட்டபோதே உள்ளே கொதிச்சிக்கிட்டிருந்தது, இளகிக் கொட்டி விடும் விளிம்பில் வந்து நின்றிருந்தது.
ஆனாலும் முருவனுக்கு குமாரு நடத்தைய நம்ப முடியல. ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ? அதே சமயம் இருந்துட்டு போவட்டுமே? இப்ப நடக்கிறது பொய்யான நாடகமாத்தான் இருக்கட்டுமே, அந்த பொய்யே எவ்வளவு சந்தோசமா இருக்கு. ரெண்டு பேரும் வடைய உள்ளே தள்ளி, டீத்தண்ணிய குடிச்சிட்டு, சொல்லிக்கிட்டு கௌம்பி வெளியே வந்தாங்க.. முருவன் வண்டிகிட்ட போய் கீழ எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு உட்கார்ந்து உதைக்க... அட ஒரே கிக்கில் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சே. அந்நேரத்துக்கு விடைகொடுக்க வந்த குமாரு, தங்கச்சி கையைப் பிடிச்சிக்கிட்டு, "கஸ்தூரி ஒண்ணும் மனசுல வெச்சிக்காதடா. அப்பா சொன்ன எழுவது செண்ட்டை அடுத்த வாரம் உன் பேருக்கு எழுதி வெச்சிட்றேன். சொத்து பெருசுன்னு தப்பா நெனைச்சிப்புட்டேன்'' அவள் கையை அழுந்தப் பிடிச்சான். கஸ்தூரி விசும்பினாள்.
அவனும் மேல்துண்டால கண்களை பொத்திக்கிட்டான். கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் உணர்ச்சியில் பேச முடியாம அமைதியா நின்னாங்க. முருவனும் புரிந்து கொண்டு காத்திருந்தான். அதுக்குள்ளார அண்ணிக்காரி வீட்டில் கொழந்தைங்களுக்குன்னு சொல்லி ஒரு பெரிய உளுந்து வடை பொட்டலத்தை பிளாஸ்டிக் கவர்ல சுத்தி கொண்டுவந்து கஸ்தூரி மறுக்க மறுக்க பையில வலுக்கட்டாயமா வெச்சா. கூடவே வேர்க்கடலை பயறு சிப்பம் ஒண்ணு ரெடியா வண்டியில வந்து உட்கார்ந்துக்கிட்டுது.
"அண்ணா எனுக்கு எந்த சொத்தும் வாணா, நானும் வெதரணையில்லாமதான் வீம்புக்கு சண்டை போட்டேன். பழையபடி நாளு கெழமையில ஒருத்தருக்கொருத்தரு வர, போவ, பேச, கொள்ள, இருந்தா போதும். அதான் எனுக்கு வோணும். வருஷத்துக்கு ஒருக்கா அப்பா எங்களை கூப்ட்டு சாப்பாடு போட்டு, துணிமணிய குடுப்பாங்களே, அதுமாதிரி குடு போதும். அதுக்குத்தான் ஆசைப் பட்றேன். உன்னை வுட்டா எனக்கு யாருண்ணா?'' சொல்லும்போதே அழுதாள்,
"இல்லடா அந்த சொத்து உனுக்குத்தான்டா. நாங்க மனசாரத்தான் சொல்றோம். என்னைக்கும் உனக்கு பொறந்த வூட்டு சீரு குறையாதுடா. மச்சான் வர்ற மாசியில காங்கியாத்தா கோவிலு திருநா வருது. குடும்பத்தோட கண்டிப்பா வரணும்.. நெருக்கத்தில வந்து கூப்பிட்றேன். நாங்களும் அப்பப்ப வர்றோம்மா'' அண்ணிக்காரியும் ஆமோதிச்சாள்.
நாம் ஒரு படி இறங்கினால், எதிரி ரெண்டு படி இறங்கிடுவான். ஒரு சமயத்தில தான் கஸ்தூரிக்கு சொன்ன இந்த வார்த்தைகளை முருவன் ஒரு தடவை நினைச்சிப் பார்த்தான். கஸ்தூரி இப்ப ரெண்டு படி இறங்கிட்டாள். ஆனா திடீர்னு எது குமாரை இப்படி மாத்திப்புடுச்சின்னு புரியலையே.
கிளம்புகிற போது கஸ்தூரி தான் குளிச்சிட்டு உடை மாற்றிய அழுக்குத் துணி பையை சாவு வீட்டில் மறந்து விட்டுட்டு வந்துட்டேன் என்று அதை எடுத்துக்கிட்டு வர ஓடினாள். மச்சான்கள் ரெண்டு பேரும் தனிச்சி நிற்க, குமாரு கிட்ட வந்து முருவனின் கையை ஆதரவாகப் பற்றினான். கண்களில் நீர் தளும்புது. அட. என்ன குமாரு?
"என்னை மன்னிச்சிடு மச்சான். உனக்கிருக்கிற பெரும்புத்தி எனக்கில்லாமப் போச்சு. இத்தனைக்கும் என் பங்காளிங்க இருக்கிற திமிர்ல அன்னிக்கு உன்னை ஒரு அடி அடிச்சிப்புட்டேன்'' பேசும்போதே உணர்ச்சியில் மொகத்தை பொத்திக்கிட்டான்.
"அட அத்த வுடுபா. நேரங்கெட்டுப் போயிதான் அப்பிடி நடந்துப் போச்சின்னு நெனைச்சிக்குறேன்.. ஆனா நீ சொல்றதே எனக்குப் புரியலையே. இன்னா எனுக்கு பெரும்புத்தி, உனுக்கு இல்லாம போச்சி''
"ஸ்பார்க் ப்ளக்கை நீயே புடுங்கி வுட்டுப்புட்டு, சும்மாவே உதைச்சி உதைச்சி ஸ்டார்ட் ஆவலன்னு என் தங்கச்சிய நம்ப வெச்சி லேட் பண்ணியே அதை பார்த்துப்புட்டேன் மச்சான். அப்பத்தான் உனுக்குள்ள இன்னா இருக்குதுன்னு எனக்குப் புரிஞ்சிது மச்சான்''. உணர்ச்சியில் முருவனின் கையை கெட்டியாகப் புடிச்சிக்கிட்டான்.
"இந்தக் கையை என்னிக்கும் வுடமாட்டேன் மச்சான், நீயும் என்னை வுட்றாத'' குமாரு கண்கலங்க, முருவன் அவனை தட்டிக் கொடுத்தான். சற்று தூரத்தில் கஸ்தூரி பையுடன் வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்து விட்டு முருவன் குமாரை "உஷ்' என்று எச்சரித்தான்.
செய்யாறு தி.தா.நாராயணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.