ஆயுள்  காக்கும்  ஆயுர்வேதம்: உடல் வலிமை... நல்ல தூக்கம்!

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிக்குன் குனியா வந்து குணமாயிற்று. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை உடல் பலவீனமாக உள்ளது. தூக்கம் குதிரைக்கொம்பாக உள்ளது. என் வயது 44.
ஆயுள்  காக்கும்  ஆயுர்வேதம்: உடல் வலிமை... நல்ல தூக்கம்!
Updated on
2 min read

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிக்குன் குனியா வந்து குணமாயிற்று. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை உடல் பலவீனமாக உள்ளது. தூக்கம் குதிரைக்கொம்பாக உள்ளது. என் வயது 44. உடல் வலுப்பெறவும், தூக்கம் நன்றாக வருவதற்கும் மருந்துகள் உள்ளனவா?

ஏஜே ஷர்மிளா, மதுரை.

தூக்கம் இயற்கையாக நல்ல நிலையில் அமைய சில நல்ல வழிகள் உள்ளன. உறங்கச் செல்லவும், விழித்தெழவும் சீரான நேர அமைப்பு அவசியம்.

தூக்கத்திற்கு முன்பு உடலுக்கும் மனத்திற்கும் அமைதி தந்து, உணர்ச்சி வசப்படக் கூடிய நிலைகளைத் தவிர்த்தல், காற்றோட்டமான பகுதியில் மெளனமாக உலாவுவது, பசுவின் பால் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டாத பானங்களைப் பருகுவது, இனிமையான சங்கீதம், இறைவனின் தோத்திரம் முதலியவற்றில் ஈடுபடுவது, தூங்குவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே லேசான நல்ல உணவை உண்டு தூங்கும்போது மேல் வயிறு கனம் குறையும் அளவிற்குக் கவனித்துக் கொள்வது, காற்றோட்டமுள்ள அறையில் நேரடியாகத் தலைப்பகுதியில் வேகமாக காற்று வீசாத அளவிற்குப் படுக்கையை அமைத்துக் கொள்வது, படுக்கையும் அதற்கு மேலுள்ள விரிப்புகளும் கதகதப்பாகவும் வியர்வைக் கசிவைக் கவர்ந்து ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் அமைதல் ஆகியவற்றைச் சொல்லலாம்.

சிக்குன்குனியா குணமாவதற்காக அதிக வீரியமுள்ள மாத்திரைகளை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், மூளையில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு தூக்கத்தை நீங்கள் தொலைத்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பிராணன் மற்றும் தர்ப்பக கபத்தின் இருப்பிடமாகிய மூளைப்பகுதியில் , அவற்றில் ஏற்படும் உயர்வு மற்றும் தாழ்வுநிலையின் காரணமாகவும், தூக்கமில்லாமல் அவதியுற நேரலாம். இந்த இருநிலைகளையும் சமநிலைப்படுத்தி, நல்ல உறக்கத்தைப் பெறுவதன் மூலமாக, உடல் வலுவும் இயற்கையாகவே கூடிவிடும்.

அதற்கான சில ஆயுர்வேத மருந்துகள்:

ஹிமஸாகர தைலம் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.

கல்யாணக கிருதம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, பத்து மில்லி லிட்டர் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும்.

ஜாதிக்காயை அம்மியில் அல்லது சொர சொரப்பான கல்லில் இழைத்து, சிறிது தேனுடன் கலந்து இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.

வாரமிருமுறை அதிரசம் ஒன்று அல்லது இரண்டை மாலையில் நான்கு மணிக்கு ருசித்துச் சாப்பிடவும்.

கசகசாவை மைய அரைத்து கூட்டு, பொறியல் போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடவும்.

எருமைத் தயிறை பகலில் உணவோடு சாப்பிடவும்.

அஸ்வகந்தா சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து, மூன்று கிராம் கல்கண்டுத்தூளுடன் கலந்து நூறு மில்லி லிட்டர் வெதுவெதுப்பான பாலுடன் இரவு சுமார் ஏழு மணிக்குச் சாப்பிடவும்.

நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக காதினுள் விட்டு சிறிது வைத்திருந்து எடுத்துவிட்டு, பஞ்சினால் துடைக்கவும்.

காலையில் பல் துலக்கிய பிறகு, இரண்டு - நான்கு சொட்டு நல்லெண்ணெய்யை மூக்கினுள் விட்டு, மெதுவாக உறிஞ்சிய பிறகு, தொண்டைக்கு வந்ததும் காறித் துப்பி விடவும்.

இரவில் படுக்கும் முன் வாயினுள் 5 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை விட்டு நன்கு கொப்பளித்துத்துப்பவும்.

காலையில் முகம், நெற்றி, நெற்றிப் பொட்டு, கண் இமைகள் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, சிறிது ஊறிய பிறகு கழுவிவிடவும்.

சிரோதாரா எனும் தைலத்தை நெற்றியில் தாரையாக விடும் சிகிச்சை மூலம், பல காலம் தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள், நன்றாகத் தூங்குவார்கள்.

பிராம்ஹ ரசாயனம் எனும் லேகிய மருந்தை சுமார் பத்து கிராம், காலை - மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, உடல் வலுவானது கூடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com