கரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தியை மருந்து மூலம் பெற விரும்புகிறேன். அதற்கான மருந்துகளைப் பரிந்துரை செய்யுங்கள்.
சிவபிரகாசம், சிதம்பரம்.
நம்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அமைந்துள்ள நமது உடல் திசுக்கள் இயற்கையோடு ஒன்றிய நடைமுறைகளை உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்று நமது உடலை சுகநிலையில் வைக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
கரோனா வைரஸை எதிர்க்கும் சக்தியை ஏற்படுத்தும் அந்த இயற்கையான தன்மையை விட்டுவிட்டு மருந்து மூலம் செயற்கையாக உருவாக்க நினைத்தால், உடலின் எதிர்ப்பு சக்தி பலம் பெற்று, அது செய்ய வேண்டிய செயலை நாம் இழந்துவிடுகிறோம். இயற்கைக்கு மாறாகக் செய்யும் இந்தத் தவறால், அடிக்கடி நோய்களுக்கு ஆளாவதோடு, அந்த நோய் நிலை மாறும் வரை, மருந்துகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இயற்கையோடு ஒன்றிய நடைமுறைகளான தூய சிந்தனை, நல்லொழுக்கம், தியானம், நல்ல செயல்கள், மன அமைதி, நீதி நூல்களைப் படித்தல், நல்லோர் சேர்க்கை, சத்துள்ள உணவு, குளிர்ந்த நீரில் குளித்தல், வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல், கூடுமானவரை இயற்கையான காற்றில் உறங்குதல், உண்ட உணவு நன்கு செரித்து நன்றாகப் பசித்த பின் உண்ண வேண்டியதை அளவோடு உண்ணுதல், நல்ல தூக்கம், சுத்தமான நீரை அருந்துதல், எல்லாரிடமும் அன்போடு பழகுதல் இன்னும் இவை போன்ற பல நல்ல பழக்கங்கள் உடலின் முக்கியமான உயிர்சக்தியை நன்கு வளர்க்க உதவுவதோடு எந்த நோயும் வராமல் தடுக்கும். HERD IMMUNITY என்று பேசப்படும்விதத்தைச் சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை இக்கருத்துகளுடன் இணைக்கலாம்.
கவலை, மனக்குழப்பம், தீய எண்ணங்கள், செயல்கள், ஒழுக்கக் கேடு, அமைதியற்றதன்மை, நேரங்கெட்ட நேரத்தில் உண்ணுதல், உறங்குதல், புகைபிடித்தல், புகையிலை போடுதல், குடிப்பழக்கம், அசுத்தமான காற்றைச் சுவாசித்தல், எண்ணெய் தேய்ப்பை விட்டுவிடுதல், வெந்நீரில் தலைக்குக் குளித்தல், அதிகக் குளிர்ச்சியானதும் அதிக சூடானதுமான பானங்களை உட்கொள்ளுதல், திறந்த வெளியில் உறங்குதல், காப்பி, டீ போன்ற பானங்களை நிறைய உட்கொள்ளுதல், அசுத்த நீரைக் குடித்தல், சாதாரண நோய்களுக்கும் விரைவில் குணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வரம்பின்றி ரசாயன மருந்துகளை உட்கொள்ளுதல், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ரசாயனப் பொருள் கலந்த புகைகளைச் சுவாசிப்பது, குடிநீரில் கலக்கப்படும் தொழிற்சாலை நீரைக் குடிப்பது மற்றும் இவை போன்ற இயற்கைக்கு மாறான வாழ்க்கையின் நடைமுறையால் உடலின் பிரதான உயிர் சக்தி பலம் குறைந்து அனைத்து நோய்களும் ஏற்படக் காரணமாகிறது.
இந்த வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில் தலை கனத்தல், மந்தமான தலைவலி, உடல்பாரமாக இருத்தல், சோம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், மூக்கின் ஓரங்களில் குறுகுறுத்த உணர்ச்சி, தும்மல் வருவது போன்ற உணர்ச்சி அடிக்கடி ஏற்படுதல், நாக்கின் ருசி அறியும் சக்தி குறைதல், மலச்சிக்கல், மூக்கிலும், கண்களிலும் நீர் கசிதல் ஆகிய குறிகள் தென்படும். இந்நிலை முற்றும்போது கடுமையான காய்ச்சல், இடைவிடாத இருமல், தும்மல், தாங்க முடியாத உடல் வலி, கண்ணெரிச்சல், கண், மூக்கிலிருந்து நீர் சுரத்தல், அமைதியின்மை ஆகிய குறிகள் உச்சகட்டதைக் குறிக்கும்.
ஆரம்பநிலையில் வெந்நீர் அருந்துதல், உணவைப் பாதியாகக் குறைத்தல், சுலபமாகச் செரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல், இரவில் வயிற்றைக் காலியாக வைத்திருத்தல், ஓய்வு எடுத்தல், காற்றுள்ள பகுதியில் உறங்குவது, புகையிலை, டீ, காப்பியை நிறுத்துதல் மூலம் கடுமையான நிலை ஏற்படாமல் தடுக்கலாம். கடுமையாகிவிட்டால் ஒன்றிரண்டு நாள் மிளகுக் குடிநீரை மட்டும் அருந்தி பட்டினி இருந்தால் உபாதையின் தாக்கம் நன்கு குறையும். கற்பூராதி தைலத்தைச் சூடாக்கி மார்பு, தொண்டை மற்றும் வலியுள்ள பகுதிகளில் தடவிவிட, நோயின் கடுமை குறையும். கற்பூராதி சூரண மருந்தை ஐந்து கிராம் எடுத்து பத்து மில்லி லிட்டர் தேனுடன் குழைத்து, உணவிற்குப் பிறகு சாப்பிட , அது உபாதையை நன்கு குறைக்க உதவும்.
(தொடரும்)