

தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள ஆரோக்கியம் எனும் சிறப்புத் திட்டத்தின்படி கரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி கூற முடியுமா?
-மாணிக்கம், திருச்சி.
கரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், கரோனா தொற்றைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது தொடர்பான சில ஆயுர்வேத மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு "ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத் திட்டம் நல்ல வரவேற்பைப் பொது மக்களிடையே பெற்றிருக்கிறது.
இதில் ஆயுர்வேத மருந்துகளாகிய இந்துகாந்தம் கஷாயம், கூஷ்மாண்ட ரசாயனம் எனும் லேஹியம், அகஸ்திய ரசாயனம் எனும் லேகியம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுபவையாக உள்ளன.
தசமூலகடுத்ரயம் கஷாயம், இந்துகாந்தம்கஷாயம், வியாக்ரயாதி கஷாயம் ஆகியவையும் மருந்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தைப் பேணிக்காப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்துகாந்தம் கஷாயத்திலுள்ள மூலிகைகளான ஆவில்பட்டை, தேவதாரு, வில்வம், குமிழ், முன்னை, பாதிரி, பெருவாகை, முள்ளுக்கத்திரி, கண்டங்கத்திரி, ஓரிலை, மூவிலை, நெருஞ்சில், திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், கொடுவேலி, சுக்கு, இந்துப்பு ஆகிய 18 மருந்துகளைக் கொண்டு இந்த கஷாயம் பெருந்தூளாக சூரணிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது. 5 கிராம் சூரணத்தை 200 மி.லி. தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மி.லி.யாகக் குறுக்கி வடிகட்டி, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குடல் மற்றும் உடல் சார்ந்த வாத நோய்கள், மஹோதரம், குல்மம், குடல் வலி, விட்டு விட்டு வரும் முறைக் காய்ச்சல் போன்றவை குணமாகும். உடலுக்கு நல்ல வலுவூட்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
கூஷ்மாண்ட ரசாயனம் எனும் லேகிய மருந்து - இருமல், விக்கல், காய்ச்சல், ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு, ரத்தக்கசிவு உபாதை, இருமி இருமி மார்புப் பகுதியைச் சார்ந்த நுண்ணிய ரத்த குழாய்கள் உடைந்து வெளியேறும் கசிவுப் பகுதி, காசநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். எதையும் மறக்காமல் இருக்கும் நினைவாற்றல், உடல் வலுவைக் கூட்டுதல் போன்ற சிறப்பையும் பெற்ற இம் மருந்தை காலை, இரவு உணவிற்குப் பிறகு சுமார் ஐந்து முதல் பத்து கிராம் வரை நக்கிச் சாப்பிடலாம்.
அகஸ்திய ரசாயனம் எனும் லேகியம் - மூப்பு, நரை போக்கும். உடல் நிறத்தைக் கூட்டும். ஆயுளையும், உடல் வலுவையும் கூட்டும். ஐந்து வகையான இருமல், காசநோய், விக்கல், மூச்சிரைப்பு, முறைக்காய்ச்சல், சர்க்கரை உபாதை, குல்மம், கிராணி, மூலம், இதய நோய், ருசியின்மை, ஜலதோஷம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். சுமார் ஐந்து முதல் பத்து கிராம் வரை, இரவில் படுப்பதற்கு முன் நக்கிச் சாப்பிடலாம்.
தசமூலகடுத்ரயம் எனும் கஷாயம் மூச்சிரைப்பு, வாதகாஸம், இருமல், விலாவலி, முதுகு, கழுத்துவலி, தலைவலி ஆகியவற்றைக் குணமாக்கும். இக்கஷாயத்தை வியாக்ரயாதி கஷாயத்துடன் சுமார் ஏழரை மி.லி. வீதம் கலந்து, அதில் அறுபது மி.லி. ஆறிய வெந்நீருடன், மூன்று மி.லி. தேன் ஆகியவற்றுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் முன் குறிப்பிட்ட இந்துகாந்தம் கஷாயமும் சாப்பிட, நல்ல உடல் திட பாதுகாப்பைப் பெறலாம்.
தமிழக அரசின் இந்தச் சிறந்த "ஆரோக்கியம்' எனும் நலத் திட்டத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியையும் உடல் நலத்தைப் பேணிக் காக்கும் உபாயத்தையும் விரைவில் பெற்று தமிழகம் கரோனா எனும் வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு, மற்ற மாநிலங்களுக்கு நல் உதாரணமாகத் திகழ வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.