தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா, படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
ஏற்கெனவே "36 வயதினிலே', "சூரரைப்போற்று' உள்ளிட்ட வெற்றி படங்களைத் தயாரித்துள்ளார். இன்னும் சில படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறது.
அறிமுக இயக்குநர் சரத் சண்முகம் இயக்கும் இப்படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் பேரன் அர்னவ் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், ஒரு சிறுவனுக்கும் அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாசப் போராட்டத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ், இப்படத்தின்டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அருண் விஜய், "மிகவும் பெருமையான தருணம் இது' என குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் "மாறன்'. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்குப் பிறகு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். நடிகர் தனுஷ் ஏற்கெனவேமித்ரன் இயக்கத்தில் "யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', "குட்டி' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது நான்காவது முறையாக தனுஷ் -
மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில்உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்பதால் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இரு கதாநாயகிகள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளாக உள்ள ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார். விவசாயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. 2014 -ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் ""செல்பி புள்ள...'' என்ற பாடலை விஜய் பாடி இருந்தார். இந்த பாடல் பட்டித்தொட்டி முழுவதும் பிரபலமானது. இந்நிலையில் ""செல்பி புள்ள...'' பாடல் இணையத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் "மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படம் வரும் ஆயுதப் பூஜையையொட்டி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை முழுவதுமாக முடித்துள்ள சிம்பு அடுத்தடுத்த படங்களில்கவனம் செலுத்தவுள்ளார். அந்த வகைவில் கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்புநடிக்கும் படம் "நதிகளிலே நீராடும் சூரியன்'. இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. "விண்ணைத்தாண்டி வருவாயா', "அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக கெளதம் வாசுதேவ்மேனனுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ளார்.இந்த நிலையில் இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் மிகுந்த பரபரப்பாக உள்ள கீர்த்தி சனோன் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். சிம்பு படத்தில் கீர்த்தி சனோன் இணைந்தால் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.