திரைக்கதிர்
By DIN | Published On : 14th February 2021 06:00 AM | Last Updated : 14th February 2021 06:00 AM | அ+அ அ- |

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்புகளில் மும்முரம் காட்டுகிறது. "36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய "சூரரைப் போற்று' வரை இந்த நிறுவனத்தின் கதை தேர்வு அசாத்தியமானது. தற்போது தங்களுடைய 14-ஆவது தயாரிப்பை அறிவித்துள்ளது இந்த நிறுவனம். அரிசில் மூர்த்தி எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு இயக்குநராக சுகுமார் பணியாற்றுகிறார். புதுமுகம் மித்துன் மாணிக்கம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
--------------------------------------------------------
எண்பதுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் ஜெயசித்ரா. தற்போது இவரது மகன் அம்பரீஷ் இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 16 வருட போராட்டத்திற்குப் பிறகு, தனக்குச் சொந்தமான ரங்கராஜபுரம் பாஸ்கரா தெருவில் உள்ள வீட்டை அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸார் இந்த வீட்டை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
--------------------------------------------------------
பிரிட்டிஷ் ஊடகவியலாளர் கிரண் ராய் மற்றும் ரால்ப் பெரிரா ஆகியோர் ஆசியாவின் பல்வேறு துறைகளில் இருக்கும் கலைஞர்களிடம் நடத்திய நேர்காணலின் மூலம் சிறந்த 500 நபர்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். அதில் நிக்கி கல்ராணியும் இடம் பெற்றுள்ளார். இந்த வரிசையில் ஏ.ஆர். ரஹ்மான் , சோனு நிகம், சாய்னா நஹ்வால், சானியா மிர்ஸா , குணால் கபூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ""பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் வரிசையில் என்னையும் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி.
--------------------------------------------------------
1991-ஆம் ஆண்டு கஸ்துரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் - மீனா நடிப்பில் வெளிவந்த படம் "என் ராசாவின் மனசிலே'. இளையராஜாவின் இசை, வடிவேலுவின் காமெடி என படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
--------------------------------------------------------
"அவன் இவன்' படத்துக்குப் பின் விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் படம் "எனிமி'. "அரிமா நம்பி', "இரு முகன்', "நோட்டா' படங்களுக்குப் பிறகு ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். "" விஷாலை முழு கோபத்துடன் எதிர்க்கத் தயாராகிவிட்டேன்'' என சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G