திரைக்கதிர்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் இயக்குநர் சுசி கணேசன்.
திரைக்கதிர்


தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் இயக்குநர் சுசி கணேசன். தற்போது "திருட்டுப்பயலே - 2'படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் ஹிந்தி டைட்டில்வெளியாகியுள்ளது. படத்துக்கு "தில் ஹே கிரே' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழில் இதன் அர்த்தம், "இதயத்தின் நிறம் சாம்பல்'. இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். சாம்பல் வண்ண இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும்கலந்தது. அப்படி ஒரு சாம்பல் இதயம் படைத்த மனிதர்களின் கதையைத் தனித்துவமாக இதில் சொல்லியுள்ளதாக சுசி கணேசன் தெரிவித்துள்ளார். 

கதாநாயகனாக வினித் குமார் சிங் நடிக்கிறார். கதாநாயகியாக ஊர்வசி ரௌத்தேலா நடிக்கிறார். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவரை சமூக வலைதளங்களில் 4.5 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். முக்கிய வேடத்தில் அக்ஷய் ஒப்ராய் நடிக்கிறார். கதாநாயகியின் அம்மாவாக சீதா நடிக்கிறார். துப்பறியும் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவைகவனிக்க, ராம் எடிட்டிங் செய்கிறார். 

பிரபல கன்னடத் தயாரிப்பு நிறுவனமான "சுரஜ் புரொடக்ஷன்' எம்.ரமேஷ் ரெட்டி படத்தைத் தயாரிக்கிறார். தெலுங்கிலும் உருவாகவுள்ள இப்படத்தை சுசி கணேசனின் தயாரிப்பு நிறுவனமான 4 வி எண்டர்டெயின்மெண்ட் - சார்பாக மஞ்சரி சுசிகணேசன் இணைந்து தயாரிக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

----------------------------------------------------


விவாகரத்து, ஜீவனாம்சம்என தொடர்ச்சியாக செய்திகளில் மட்டுமே இருந்த சமந்தா, அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். சமீபகாலமாகதனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்னைகளைச் சந்தித்து வந்தவேளையிலும், அதை கடந்து தனது சினிமா பயணத்தில் கவனம் கொண்டுள்ளார். இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்தப் படங்கள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, பிரபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்குகிறார். சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

இவர் ஜெயம் ரவி நடித்த "மழை' படத்தை தயாரித்தவர். "" சமந்தாவை இந்த படத்தில் ஒரு புது அவதாரத்தில் காணநாங்கள் மிகுந்த ஆவலாக உள்ளோம். இந்த படத்தை பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இந்த படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஐடியாக்கள் நிறைந்த கதை. அதே போல் இரு இயக்குநர்களுக்கும், அவர்களுடைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது'' என்றார் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத். படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்குகிறது.
 

----------------------------------------------------

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடன இயக்குநராக முத்திரை பதித்து வருகிறார் லலிதா ஷோபி.கமல், விஜய், விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணிநட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குநராகப் பணியாற்றிய"சுஃபியும் சுஜாதாயும்' மலையாளப் படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டைப் பெற்றது.தற்போது 51-ஆவது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்குநருக்கான விருதை "சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்காகலலிதா ஷோபிபெறுகிறார்.

""இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குநர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாள்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில், இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறியிருந்தனர்.அது இன்று நிறைவேறியுள்ளது. கடவுளுக்கு நன்றி. கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனதுமனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் லலிதா ஷோபி.
 

----------------------------------------------------

நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவிலும் இல்லறத்திலும் ஈடுபட்டு வரும் காஜல், தற்போது சிரஞ்சீவியுடன் "ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் "இந்தியன் 2' மற்றும் ஒரு பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். "இந்தியன் 2' படத்துக்கான சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தமிழில் தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். நயன்தாரா, த்ரிஷா பாணியில் நடிக்க கதைகளைத் தேடி வருகிறார். 

இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து "கிச்சட்' என்ற பெயரில் வீட்டு உள் அலங்காரப் பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலைத் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் வீட்டை அலங்கரித்து தருவதுடன், வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்யும். இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல். சினிமா போக மீத நேரங்களில் மும்பையில் உள்ள தனது நிறுவனத்தின் அலுலகத்தில் காஜலை இப்போது பார்க்க முடிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com