(திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்)
அடேங்கப்பா 6 பேர் சைவ உணவகம்
டி.விசாலாட்சி,
சென்னை-33.
(தஞ்சாவூர் அருகேயுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ளது)
ஹோட்டல் பனைமரம்.
க.இளங்கோவன்,
நன்னிலம்.
(விழுப்புரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு லாரியின் டீசல் டேங்க்கில் காணப்பட்ட வாசகம்)
தாகம் தீராத மங்கை.
கே. இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
(ஈரோடு மண்டபம் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பெயர்)
1, 2 செட்டியார் கடை
- க. ரவீந்திரன்,
ஈரோடு- 2.
(பொறையாரில் உள்ள தேநீர்க் கடையில்)
"" ஒரு டீயைக் குடிச்சிட்டு 5 ரூபாய் தர்றியே...
அந்த போர்டைப் பாரு... டீ - 10 ரூபாய்ன்னு போட்டிருக்கு?''
""டீ-யா... இது?''
சரஸ்வதி செந்தில்,
பொறையார்.
(தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் சர்க்கரை ஆலை அருகே இருவர்)
""வீடு தேடி வந்து உங்க பையன்
கல்யாணத்துக்கு கூப்பிட்டீங்க... ஆனா வர முடியலே.. வேஷ்டிங்க''
""என்ன வேஷ்டியா?''
""கல்யாணத்துக்கு வர முடியாததுக்குப் போய்
எதுக்குப் பொம்பளைங்க கட்டுற "சாரி'
சொல்லணும்?''
ரெ.ஜெயப்பிரகாஷ்,
குருங்குளம்.
யோசிப்பதற்கு எடுத்துக்
கொள்ளப்படும் நேரம்,
செயல்படுத்துவதற்கு
எடுத்துக் கொள்ளப்படும்
நேரத்தின் விதை.
பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.
பிரபல ஜோதிடர் சுந்தரதிலகம், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்திருந்த சேதுராமனைப் பார்வையாலேயே எடை போட்டார்.சேது ஆரம்பித்தார்.
""கொஞ்ச நாளாகவே எதுவும் சரியில்லைங்க. அடி மேல அடி. நான் ஒண்ணு சொல்றேன் அதொண்ணு நடக்குது! எடுக்கிற காரியம்ல்லாம் தோல்வி! வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு குறைஞ்சுடுச்சு. புத்தி கலங்கிப் போச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை''
அவரது ஜாதகக் கட்டங்களை உன்னிப்பாகப் பார்த்தார் ஜோதிடர். நோட்டில் ஏதேதோ கணக்குகள் போட்டார்.
""ஆமாம். உங்க நேரம் ரொம்ப மோசமா இருக்கு. எதைத் தொட்டாலும் பிரச்னை கொடுக்கணுமே...''
""ஆமா... ஆமா... எப்ப
சரியாகும் இதெல்லாம்?''
""அடுத்த ஜூன் முடியணும். அதுவரைக்கும் பெரிசா எந்த முயற்சியும் எடுக்க வேணாம். சில பரிகாரங்கள் சொல்றேன். செய்து வாங்க''
அவர் சொன்னவற்றைக் கவனமாக கேட்டுக் குறித்துக் கொண்டார் சேது.
""சரிங்க... அதுபடியே நடந்துக்கறேன்''
""ஆமாம்... தவற விட்டுடாதீங்க! அதுசரி, என்ன பண்றீங்க நீங்க, என்ன தொழில்?
""நான்... தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் வகுப்புகள் எடுக்குறேன்... புத்தகம் எழுதுறேன்'' என்றார் சேதுராமன்.
நித்யா,
பொள்ளாச்சி- 1.
வாழ்க்கைங்கிறது டீ போடுற மாதிரி -
உங்க ஈகோவை கொதிக்க விடுங்க;
உங்க கவலைகளை ஆவியாக்குங்க;
உங்க துக்கங்களைக் கரைச்சிடுங்க;
உங்க தவறுகளை வடிகட்டுங்க;
அன்புங்கிற பாலை கலந்திடுங்க;
மகிழ்ச்சியா ருசிங்க!
எல். மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1