திரைக்கதிர்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்  கீர்த்தி சுரேஷ்.
திரைக்கதிர்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்  கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவர், தனது செல்லப் பிராணியுடன் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலை தளத்தில் எப்போதும் இருக்கும் கீர்த்தியின், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

----------------------------------------------------------

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியது, ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடையச் செய்துள்ளது. வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகத்தினருடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருடங்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. சுராஜ் இயக்கத்தில் வடிவேலு "நாய் சேகர்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ். 

----------------------------------------------------------

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த படம் "இந்தியன் 2'.   70 சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிவுற்றபோது, விபத்து ஏற்பட்டு  படப்பிடிப்பு  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில்  ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

"இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைகா வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி மத்தியஸ்தராக இருந்து இருதரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் "இந்தியன் 2' படப் பிரச்னையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.  


----------------------------------------------------------


நடிகர் சூரி, ரஜினியுடன் "அண்ணாத்த' படத்தில் நடித்துவருகிறார். அந்த பட அனுபவங்கள் குறித்து,  ""அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக்கொண்டது.  அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போய் விடுகிறது. அப்படி ஒரு டவுன் டூ எர்த் மனிதராக பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படி போடச் சொல்லி இருக்கிறார் என்று கேள்விபட்டதும் நான் விமானத்துக்கு மேலேயே பறந்து தான் வந்தேன். அந்த பயணத்தின்போது என்னை பார்த்து "நான் உங்களுக்கு கம்ஃபர்டிபிளாக இருந்தேனா?' என்று கேட்க அசந்துபோனேன்'' என்கிறார் சூரி. 

----------------------------------------------------------

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் அருண்விஜய்யின் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் ஹரியைத் தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.


""எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்; ஆதலால் எனக்குப் பதிலாக வேறு நடிகரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள்'' என்று ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி, அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் "கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com