டிவி இல்லாத வீடு இல்லை என்ற நிலைக்கு மனிதர்கள் சென்றுவிட்டார்கள். அதுவும் தற்போது ஸ்மார்ட் டிவி யுகத்துக்கு மக்கள் வேகமாக மாறி வருகிறார்கள். இதனால் பழைய எல்க்ட்ரானிக் பொருள்களின் கழிவுகள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருவது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டிவிக்களுக்கு பயன்படுத்தப்படும் ரிமோட்களுக்கான பேட்டரிகளை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். இன்னும் நொடிக்கு நொடி டிவி சேனல்களை மாற்றும் பழக்கமுள்ளவர்களுக்கு மாதந்தோறும் இரண்டு பேட்டரிகளை மாற்ற வேண்டும். சார்ஜ் தீர்ந்த போதும் பேட்டரிகளின் கழிவுகள் மட்டுமே ஆண்டுதோறும் பல கோடிகளை தாண்டும்.
இந்த பேட்டரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து நேரடியாக குப்பையோடு சேர்ந்து வீசப்படுவதால் நேரடியாக மண்ணில் மக்கி விஷத்தை ஏற்படுத்தி சுற்றுச் சூழலுக்கு நீண்ட காலக்கேடு விளைவிக்கின்றன.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிக்களின் ரிமோட்களை சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்துடன் அண்மையில் அறிமுகம் செய்தது.
இதன் அடுத்தகட்ட முயற்சியாக, முழுவதும் மறுசூழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி ரிமோட்டை வை-ஃபை மூலம் வெளியாகும் ரேடியோ அலைகள் மூலமே தானாகவே சார்ஜாகும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் மூலம் அடுத்த ஏழு ஆண்டுகளில் 99 மில்லியன் பேட்டரி கழிவுகளைத் தடுக்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைபோல் தேங்கி வரும் எலக்ட்ரானிக் கழிவுகளை குறைக்க வழிவகுக்கும் இந்த தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கது.