ரோட்டரி சங்கத்தின் உலகத் தலைவராக ஜெனிஃபர் இ. ஜோன்ஸ் ஜூலை 1-இல் பதவியேற்கிறார். 2022-23- ஆம் ஆண்டுக்கான தலைவரான இவர், 117 ஆண்டு கால ரோட்டரி சங்க வரலாற்றில், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் ஆவார்.
1905-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பால் ஹாரிஸ் தனது நண்பர்களுடன் தொடங்கியதுதான் ரோட்டரி சங்கம். "சேவை- நட்பு- வணிகம்' என்பதை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தில், பெண்கள் உறுப்பினராகச் சேரத் தடை இருந்தது. அமெரிக்கா உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் 1989-ஆம் ஆண்டு முதல் பெண்கள் சேர அனுமதிக்கப்பட்டனர். தற்போது "இன்னர்வீல் சங்கம்' என்ற பெண்கள் பிரிவே இயங்கிவருகிறது.
ரோட்டரி சங்கத்தின் உலகத் தலைவராக ஜெனிஃபர் இ.ஜோன்ஸ் ஜூலை 1-இல் பதவியேற்கிறார். 1997-ஆம் ஆண்டு முதல் ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் இவர், ரோட்டரியின் அறக்கட்டளையின் துணைத் தலைவர், இயக்குநர், பயிற்சித் தலைவர், குழுத் தலைவர், மதிப்பீட்டாளர், மாவட்ட ஆளுநர் என பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கரோனா நிவாரணத்துக்காக நிவாரண நிதியைத் திரட்டியதில் பெரும் பங்காற்றினார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
சென்னைக்கு ஜூலை 25,26-இல் அவர் வருகை தருகிறார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.