ஊனம் தடையில்லை...

''ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமையை வெளிப்படுத்த உடல் ஊனம் ஒருபோதும் தடையாக இருக்காது''  என்கிறார் ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா.
ஊனம் தடையில்லை...

''ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமையை வெளிப்படுத்த உடல் ஊனம் ஒருபோதும் தடையாக இருக்காது'' என்கிறார் ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஆடி கார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் தலைமை அலுவலராகப் பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் கோவையைச் சேர்ந்த ஜெ. ஸ்வர்ணலதா. இவருக்கு 2009-இல் தனது 29-ஆவது வயதில் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் வாழ்க்கையையே தலைகீழாகமாற்றியது.

'மல்டிபிள் ஸ்கிளிராசிஸ்' என்ற நோயால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால், உடல் முடங்கி சக்கர நாற்காலியில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், அவர் தன்னம்பிக்கையோடு பல்வேறு தளங்களில் பரிணமித்து வருகிறார். ' நினைத்ததை சாதிக்க உடல் ஊனம் எப்போது தடையாக இருக்காது' என்பதை மாற்றுத் திறனாளிகளுக்கு உணர்த்தும் வகையில் செயல்பட்டுவருகிறார்.

கோவைக்கு 2010-இல் வந்த ஸ்வர்ணலதா தனது கணவர் மருத்துவர் குருபிரசாத் உதவியுடன் 'ஸ்வர்கா' என்ற அறக்கட்டளையை புலியகுளத்தில் ஏற்படுத்தினார்.

'செளக்யா' என்ற சிகிச்சை மையத்தை ஏற்படுத்தி, மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இயன்முறை பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இம்மையத்தில் 400 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசி, தன்னம்பிக்கை பேச்சாளராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளிகள் பயணம் மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக வடிவமைத்து, 'சாரதி' என்ற பெயரில் வாகனத்தை வாடகைக்கு இயக்கி வருகிறார்.

கோவை ரயில் நிலையம், 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, நடைமேடை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

2010-இல் நடைபெற்ற 'மிஸஸ் இந்தியா சவுத் பியூட்டி கான்டஸ்ட்' போட்டியில் சராசரி போட்டியாளர்களுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களின் 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஸ்வர்ணலதா கூறியதாவது:

ஊனம் என்பது மனதில்தான் உள்ளது. முயற்சிக்கு எப்போதும் தடையாக இருக்காது. மாற்றுத் திறனாளிகள் உடல் பாதிப்பால் முடங்காமல் உள்ளத் துணிவால் சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.

ஆரம்பத்தில் எல்லாரையும்போல மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். ஆனால், முடங்கியுள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடிவு செய்து பயணித்து வருகிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஆற்றல் இருக்கிறது. இதனை வெளிப்படுத்த உடல் ஊனம் தடையாக இருக்கக் கூடாது.
மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, 'ஸ்வர்கா' அறக்கட்டளையை உருவாக்கினேன்.

2016-ஆம் ஆண்டில் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்ல வாடகை காரில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது என்னுடைய சக்கர நாற்காலியைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, மாற்றுத் திறனாளிகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக வடிவமைத்ததுதான் சாரதி வாகனம். இந்த வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலியுடன் பயணிக்க முடியும். தவிர கழிப்பறை, படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாள்தோறும் உடலில் பல்வேறு வலிகள் இருக்கும். ஆனால் இலக்கை வைத்துக்கொண்டு பயணிப்பதால் பயணத்தில் வலிகள் தெரியாமல் போகிறது.

இந்த உழைப்பு உங்களை வாழ்வின் அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்லும். எனவே சாதிக்க துடிக்கும் அனைவரும் ஊனம் ஒரு தடையல்ல!'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com