(திருப்பூர் காதர்பேட்டை உள்ள ஓர் ஆயத்த ஆடையகத்தின் பெயர் )
ஸ்டிரிட் டாக்
-ம.வின்சென்ட்ராஜ்,
திருப்பூர்.
(குமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
முன்சிறை
-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணபுதூர்.
(திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஒரு காரில் எழுதியிருந்தது)
நூறு வெற்றிகளால் ஆனவன் அல்ல..
ஆயிரம் தோல்விகளால் உருவானவன்.
-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.
(திருவாரூரில் உள்ள ஓர் பேருந்து நிறுத்தத்தில் இருவர்)
""என்ன சார்.. நீங்க டீ சொன்னதுக்கு அப்புறம் கேட்டவங்களுக்கெல்லாம் மாஸ்டர் டீ கொடுத்துட்டாரு... அவரு உங்களுக்கு வேண்டாதவரா?''
""இல்லை.. எனக்கு வேண்டியவர்தான். டீத் தூள் மாத்தி, புதுசா டீ போட்டு கொடுப்பாரு?''
-மு.தனகோபாலன்,
திருவாரூர்.
(திருச்சியில் ஓர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில்..)
""இந்த பை ஒன். நெட் ஒன் எல்லாம் ஏமாத்து வேலை தானே..!''
""ஏமாத்து வேலை இல்லீங்க... தொழில் தந்திரமுன்னு சொல்லுங்க..?
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(திருச்சியில் ஓர் தனியார் மருத்துவமனையில்..)
""உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும்னா ரூ.5 லட்சம் செலவாகும் மேடம்..''
""என்ன டாக்டர் கூலிப்படையை விட அதிகமாகவே கேட்கறீங்களே..''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
பணமும் சரி.. அழகும் சரி.. நிரந்தரம் அல்ல;
நல்ல குணம் மட்டுமே நிரந்தரம்.
-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
""என்னங்க.. மாடியில குடியிருந்தவங்க மூணு மாசமா வாடகை தரலை. அவங்களை காலி செய்யணும்'' என்று ஆதங்கத்துடன் சொன்னாள் முத்துமாரி.
இதற்கு சங்கரன், ""என்னோட பால்ய சினேகிதன் ரமேஷ் எதுக்கு வந்தான் தெரியுமா?'' என்றார்.
இதற்கு முத்துமாரி, ""தெரியாதுங்க..!'' என்றாள்.
""புது வீடு கட்ட ரூ.10 லட்சம் கடன் வாங்கினோம்ல. அதை கேட்க வந்தான். லோன் போட்டுத் தர்றேன்னு சொன்னேன். அவனும் சரின்னு கிளம்பிட்டான். கஷ்டத்துல வாடற குடித்தனக்காரங்களுக்கு நாமும் இந்தக் கரிசனத்தைக் காட்டறதுதானே முறை'' என்றார்
சங்கரன்.
""உண்மைதாங்க..'' என்று ஆமோதித்தாள் முத்துமாரி.
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
சப்தத்தை உருவாக்க முடியும்.
நிசப்தத்தை உருவாக்க முடியாது.
தே.முத்துராமன்,
மதுரை.
தொழிற்சாலை ரோபோக்கள் தயாரிப்பில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. பெய்ஜிங்கில் இந்தாண்டு நடைபெற்ற ரோபோ கண்காட்சியில் மருத்துவம், ஹோட்டல், வீட்டு உபயோகம் என பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் இடம்பெற்றிருந்தன.
மறைந்த அறிவியில் விஞ்ஞானிகள் ஆல்பட் ஐயின்ஸ்டைன், மைக்கேல் பிரடே ஆகியோரைப் போல் துல்லியமாக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் மனிதர்களின் உடல் அசைவையும், முக பாவனைகளையும் செய்யதது காண்போரை அசர வைத்தது.
இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மனித ரோபோக்கள் வீட்டுப் பணியாளர், வயதானவர்களுக்கு உதவும் பணியாளர் என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம் என்று ரோபோவை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்தது.
உடல் ஊனமுற்றோர் சகஜமாக நடந்து செல்லவும், இரு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்லும் வகையில் செயற்கை நுண்ணறிவு தானியங்கி ரோபோக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தன.
கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டு சில நிமிடங்களில் முடிவை அறிவிக்கும் ரோபோ, அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ, ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ரோபோ, ரோபோ மீன், ரோபோ நாய்கள், பேரிடர் காலங்களில் ஆபத்தான பகுதிகளுக்குள் ஊடுருவி சென்று மீட்புப் பணிகளுக்கு உதவும் ரோபோக்களை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை புகுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்கள் வரும் காலங்களில் மனிதர்களின் பணிகளை மேலும் சுலபமாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
-அ.சர்ப்ராஸ்