விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விவசாயம் செய்து, அதிலிருந்து மதிப்புக் கூட்டுதல் முறையில் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் லதா அபிரூபன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''2008-ஆம் ஆண்டில் 7 ஏக்கரில் முள்புதர்களை அகற்றி, சுத்தம் செய்து மண்புழு உரத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன். பின்னர், 150 தென்னை மரங்களை நட்டேன்.
இந்த மரங்களுக்கு இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினேன். தொடர்ந்து, பப்பாளி, முருங்கை, கற்றாழை, செம்பருத்தி. மருதாணி உள்ளிட்டவற்றை வளர்க்கத் தொடங்கினேன். கத்தரி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றையும் பயிரிட்டேன்.
தேங்காயை சூரிய சக்தி மூலம் உலர வைத்து, கல் செக்கு மூலம் தேங்காய் எண்ணெயைத் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்தேன்.
செம்பருத்தி எண்ணெய், கற்றாழை எண்ணெய், முருங்கை எண்ணெய், கருவேப்பிலை எண்ணெய், மருதாணி எண்ணெய் உள்பட பல ரகங்களை தேங்காய் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்தேன்.
இவைதவிர, கற்றாழை சோப்பு, எலுமிச்சை சோப்பு, பாதாம்பால் சோப்பு, வெண்ணிலா சோப்பு, ஜாஸ்மின் சோப்பு என 13 வகையான சோப்புகளை தேங்காய் எண்ணெய் மூலம் தயாரித்து விற்பனை செய்தேன்.
இந்தப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. தற்போது செடிகளில் இலைப் பகுதியில் தெளிக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 'ஆர்க்கானிக் ப்ளோர் ஸ்பிரே' என்ற பெயரிலான திரவத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
'வித் ரிக்கார்ட்ஸ்' என்ற எனது பண்ணைத் தோட்டத்துக்கு இயற்கை விவசாயம் என அரசின் சான்றிதழ் பெற்றுள்ளேன். 'இயற்கையுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்' என்ற கோஷத்தை உருவாக்கி மக்களிடம் பரப்பி வருகிறேன்'' என்றார்.