திரைக்  கதிர்

கார்த்தியின் 25-ஆவது படமான "ஜப்பான்' படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
திரைக்  கதிர்
Updated on
1 min read


கார்த்தியின் 25-ஆவது படமான "ஜப்பான்' படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ராஜூமுருகன் இயக்கி வரும் இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். அவருடன் தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன் உள்படப் பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை ஜி.வி.பிரகாஷ்குமார். சென்னை, கேரளாவைத் தொடர்ந்து மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. சென்ற டிசம்பரில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த கார்த்திக்கு இடையில் பிரேக் அமைந்ததால், குடும்பத்தினருடன் ஸ்பெயின் சென்று வந்தார். இதனிடையே அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

----------------------------------------------------

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்த "சாணிக்காயிதம்' படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் "கேப்டன் மில்லர்'. இதில் கன்னட  ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா அருள் மோகன், சுந்தீப் கிஷன், போஸ் வெங்கட், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், பால சரவணன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவையும், ஜி.வி.பிரகாஷ் இசையையும் கவனித்து வருகிறார்கள். இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது குற்றாலம், தூத்துக்குடி பகுதிகளில்  மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

----------------------------------------------------

பிலிம்பேர் ஓ.டி.டி விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது  அபிஷேக் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அமிதாப் பச்சனும் தன் மகனான அபிஷேக் பச்சனைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.  அப்பதிவில், ""நீதான் என் பெருமை மகிழ்ச்சி எல்லாமே. நீ சொன்னதை நிரூபித்துக் காட்டி விட்டாய். நிறைய ஏளனங்களையும், கேலி, கிண்டல்களையும் எதிர்கொண்டிருக்கிறாய்.  ஆனால் தற்போது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நீ யார் என்பதை காட்டிவிட்டாய். இன்று மட்டுமல்ல என்றென்றைக்கும் நீ சிறந்தவனாகத்தான் இருப்பாய்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

----------------------------------------------------

ஈரானில் இஸ்லாமிய பெண்கள் ஆடைக் கட்டுபாடுகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாடல் மற்றும் நடிகையான ஊர்வசி ரவுடேலா ஈரானில் நடக்கும் இஸ்லாமியப் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தனது முடியை வெட்டிக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "ஈரானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணான மஹ்சா அமினியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானிய இஸ்லாமியப் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் என் தலைமுடியை வெட்டிக் கொண்டேன்' என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com