

விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடிக்கும் "குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் இது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா - " ஹிருதயம்' படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து "குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------
"பரியேறும் பெருமாள்', "இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு', "ரைட்டர்', "சேத்துமான்', "குதிரைவால்', "நட்சத்திரம் நகர்கிறது', "பொம்மை நாயகி' என கவனிக்கத்தக்க படங்களை தயாரித்து தருகிறது பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ். இந்த நிலையில் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரைக்கு இரண்டாவது வாய்ப்பை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கி இருக்கிறார் பா. ரஞ்சித். படத்தின் பெயர் "தண்டகாரண்யம்'. இந்த படத்தில் "அட்டக்கத்தி' தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன், மயில்சாமி,சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
---------------------------------------------------------
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் "காமெடி கிங்' கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களை கூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல் மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்து வரும் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பின் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு "பழனிச்சாமி வாத்தியார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.
---------------------------------------------------------
"தங்கர்பச்சானின்' கருமேகங்கள் கலைகின்றன படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ""படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படமாக்குகிறேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி முடிப்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. மக்களிடத்தில் பெயர் பெற்ற பாரதிராஜா, யோகி பாபு, கெளதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரைக்கொண்டு "கருமேகங்கள் கலைகின்றன' படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. மனதுக்கு நிறைவான படைப்பை உருவாக்கத்தான் இத்தகைய போராட்டம் என எண்ணுகையில் சோர்வும் அயர்ச்சியும் மறைகின்றன. இனி வரும் நாள்கள் படைப்பை செறிவூட்டி உயிருள்ள படைப்பாக மாற்றுவதற்கான நாள்கள். இவ்வாண்டு இறுதிக்குள் என் இயக்கத்தில் மூன்று படைப்புகள் வெளிவரும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் தங்கர்பச்சான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.