பாரதிராஜாவுக்காக மதுரையில் மிகப் பிரமாண்டமான கச்சேரியை ஏற்பாடு செய்துவருகிறார் இளையராஜா. ரஜினி, கமல் போன்ற சீனியர்களும், பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகளும், முக்கிய இயக்குநர்களும் எனப் பெரிய அளவில் திரையுலகத்தினர் பங்கு பெற உள்ளனர். இந்தக் கச்சேரி மூலம் வரும் நிதி அனைத்தையும் பாரதிராஜாவுக்கு அளிக்கப் போகிறாராம் ராஜா.
------------------------------
தனது கவிதைகளையெல்லாம் தொகுத்துத் தயார் செய்துவிட்டார் கமல்ஹாசன். அந்தத் தொகுப்பை தனது மய்யம் சார்பாக வெளியிட இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தத் தொகுப்பு வெளியாகிறது. மறைந்த ஞானக்கூத்தன் இந்தத் தொகுப்புக்கு ஏற்கெனவே முன்னுரை எழுதிக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------
சூர்யாவின் குழந்தைகள் இப்போது மும்பையில் படித்து வருகிறார்கள் என்பதால், பெரும்பாலும் அவர் மும்பையில் இருந்துதான் படப்பிடிப்புக்கு வந்து செல்கிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு தீபாவளியைக் கொண்டாட ஜோதிகா, குழந்தைகள் எனப் பலரும் சென்னை வந்திருக்கின்றனர். சூர்யா வீட்டில் நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா எனப் பலரும் அவர்களது நெருங்கிய நட்பு வட்டங்களை வீட்டிற்கு வரவழைத்து, தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர். அப்போது சில முக்கிய நண்பர்களுக்கு பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
------------------------------
கமல் ஷங்கர் இணையும் "இந்தியன்2' படத்தின் முன்னோட்டம் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் கமல் மணிரத்னம் இணையும் "தக் லைஃப்' படத்தின் புகைப்படங்களும் இன்னொரு படத்தின் நகல் என ஆன்லைன் ஆட்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், கமல் அ.வினோத் இணையும் படம் குறித்த அறிவிப்பை ராஜ் கமல் நிறுவனம் இன்னும் சில நாள்களுக்குத் தள்ளிப்போடும் ஐடியாவில் இருக்கிறதாம். ஏற்கெனவே ஏழு மாதங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அ.வினோத், "தீரன் அதிகாரம்2' படத்தை இயக்கிவிட்டு, கமல் படத்துக்கு வரலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம்.
------------------------------
கீர்த்தி சுரேஷ் நடிகையாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"என் திரையுலகப் பயணம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன் என்று கருதுகிறேன். நான் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் என்னை ட்ரோல் செய்பவர்களுக்கும் நன்றி. அவர்களின் விமர்சனங்களும் என்னை வளர்த்திருக்கிறது" என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.