Enable Javscript for better performance
இந்திய மார்க்கெட்டை குறி வைக்கும் தென் இந்திய நடிகர்கள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்திய மார்க்கெட்டை குறி வைக்கும் தென் இந்திய நடிகர்கள்!

    By டெல்டா அசோக்  |   Published On : 28th May 2023 12:00 AM  |   Last Updated : 28th May 2023 12:00 AM  |  அ+அ அ-  |  

    28kadhir9

     

    'பேன் இந்தியா...' இப்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் வாசகம்.

    கரோனாவால் முடங்கிப் போயிருந்தது சினிமா உலகம். இன்னொரு பக்கம் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி. தளங்களின் ஆதிக்கம் அதிகமானது. அதில் வேற்று மொழிப் படங்களைப் பார்த்து மக்கள் பழகிவிட்டனர். நேரடியாக ஒரு படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகுமா? என்ற எண்ணம் இருந்த சூழல் மாறி, எல்லா மொழியிலும் பெரிய ஹீரோக்களின் படங்களையே நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிடும் அளவுக்கு, மார்க்கெட் பெரிதாகிவிட்டது. தற்போதைய சினிமா சூழல் எப்படி இருக்கிறது, பேன் இந்தியா, பைலிங்குவல், மல்டிலிங்குவல் என மார்க்கெட் விரிவடைந்ததன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.

    கோலிவுட் - டோலிவுட்

    தென் இந்திய சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்த காலத்தில் அனைத்துத் தென் இந்திய சினிமாக்களின் பணிகளும் இங்கேதான். பிறகு, அந்தந்த மொழிப் படங்கள் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலேயே உருவாக ஆரம்பித்துவிட்டன. தமிழ் ஹீரோக்கள் தெலுங்குப் படத்தில் நடிப்பதும் தெலுங்கு ஹீரோக்கள் தமிழ்ப் படத்தில் நடிப்பதும் சகஜமாக இருந்தது. காலப் போக்கில் இந்த வழக்கம் குறைந்து அவரவர் மொழியில் தங்களுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டனர்.

    ஓ.டி.டி. தளங்கள் மக்களுக்கு அறிமுகமாகி எல்லா ஊர்ப் படங்களையும் பார்க்கப் பழகியவுடன், அவரவர் மார்க்கெட்டை பக்கத்து மாநிலங்களிலும் விரிவடையச் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    டோலிவுட் சினிமாவின் வளர்ச்சியை 'பாகுபலி'க்கு முன், பின் எனப் பிரிக்கலாம். பாகுபலி இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க எப்படியான வரவேற்பைப் பெற்றது என்பது அறிந்ததே! இந்தப் படத்தால் இயக்குநர் ராஜமௌலியையும் நடிகர்களையும் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் தெரிந்தது. அதைப் பயன்படுத்த, தொடர்ந்து அது போன்ற பிரமாண்ட படங்களை எடுத்து இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியிடுகின்றனர்.

    'ஆர் ஆர் ஆர்' படம் ஸ்பானிஷ், டர்கிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூட வெளியாகிறது. இந்திய சினிமா என்றால் பாலிவுட்தான் என்ற எண்ணம் மற்ற நாட்டவருக்கு உண்டு. அந்த எண்ணத்தை மாற்றப் போராடிக் கொண்டிருக்கிறது டோலிவுட். மார்க்கெட் ரீதியாக டோலிவுட்டின் மாஸ்டர் ப்ளான் என்னவென்றால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும்,. அதில் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னட சினிமா நடிகர்களையும் நடிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய ஐந்து மாநில மக்களை ஈர்த்துவிடலாம். அதனை ஹிந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும். இதன் மூலம் வணிக ரீதியாகவும் நிறைய கதவுகள் திறக்கும். அதில் நடிக்கும் நடிகர்களுக்கான பிசினஸூம் விரிவடையும்.

    இப்போது தமிழிலிருந்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படங்களை டோலிவுட் இயக்குநர்களை வைத்துத்தயாரிக்கிறார்கள். தவிர, மலையாளத்தில் இருந்து துல்கர் சல்மான், பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களையும் சுதீப், தனஞ்செயா, துனியா விஜய் போன்ற கன்னட நடிகர்களையும் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார்கள். சமீபமாக, 'ஆர் ஆர் ஆர்', 'புஷ்பா' பட விழாக்களில் 'இது தெலுங்கு சினிமா அல்ல, இந்திய சினிமா' என்ற ஸ்லோகனை மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தினார்கள்.

    'ஹிந்திப் படம் மட்டும் இந்திய சினிமா கிடையாது' என்பதுதான் டோலிவுட் உணர்த்த விரும்பும் உண்மை.

    மலையாள சினிமா

    மலையாள சினிமாவுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்குவதில் மல்லுவுட் எப்போதும் கில்லி. மம்மூட்டி, மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களும் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. ஓ.டி.டி தளத்துக்கென்றே அவர்களின் சில படங்கள் தயாராகின்றன. ஓ.டி.டி. தளங்களும் மலையாளப் படங்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. காரணம், அவர்களின் பட்ஜெட். ரூ.2 கோடிக்குள் ஒரு படத்தை எடுத்து ரூ.4 கோடிக்கு விற்றுவிடுகிறார்கள்.

    ஓ.டி.டி,யின் மூலம் நல்ல லாபமும் கிடைத்திருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு படத்துக்குக் கொடுக்கும் தொகையில் ஏழெட்டு மலையாளப் படங்களை வாங்கி விடுகிறார்கள். அதனால், ஓ.டி.டி.யை மிகச்சரியாகப் பயன்படுத்தி நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வாரி வழங்குகிறது மலையாள சினிமா.

    பேன் இந்தியா படங்கள்

    பேன் இந்தியா, தமிழ் தெலுங்கு பைலிங்குவல் படங்கள் அதிகரிப்பது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது:

    ''விஜய் சாருக்கு பேன் இந்தியா மார்க்கெட் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரியான கதைகளில் அவர் நடிக்க வேண்டும். 'துப்பாக்கி', 'மெர்சல்', 'பிகில்' எல்லாமே எல்லா மாநிலத்துக்கும் பொருந்துகிற கதைகள்தான். ஆனால், அதை பேன் இந்தியா படமா உருவாக்கியிருக்க வேண்டும். தெலுங்குப் படங்களை ஆரம்பத்தில் இருந்தே 'இது பேன் இந்தியா படம்' என்றுதான் அறிமுகப்படுத்துகின்றனர். எல்லோரும் உணரக் கூடிய படங்கள் எல்லாமே பேன் இந்தியா படங்கள்தான். இதில் ஏதோ ஒன்று இல்லையென்றாலும் அது முறையான பேன் இந்தியா படம் இல்லை.

    ஒரு மொழியில் படத்தை எடுத்துவிட்டு, அதை நான்கைந்து மொழியில் டப் செய்து வெளியிட்டால் அது பேன் இந்தியா படமில்லை. அது மல்டிலிங்குவல் படம். பேன் இந்தியா ரிலீஸ் படம் என்றும் சொல்லலாம். ஒரு பேன் இந்தியா படத்தைத் தொடங்குவதற்கு அடிப்படைப் புள்ளி, கதைதான். எல்லா ஊருக்கும் இந்தக் கதை பொருந்துமா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பொருந்தினால், அதேதான் கன்டென்ட். ஆனா, அதை நம்ம பேன் இந்தியா ரிலீஸா பண்றோமா அல்லது பேன் இந்தியா படமா பண்றோமா அப்படிங்கிறது தயாரிப்பாளர் கையிலயும் ஹீரோக்கள் கையிலயும்தான் இருக்கிறது. குறைந்தது ரெண்டு மொழியிலாவது ஷூட் பண்ணணும். மத்த மொழியில டப் பண்ணணும். அதுக்கு ஹீரோக்களுடைய ஒத்துழைப்பும் வேணும். 'பாகுபலி' தமிழ் - தெலுங்குல எடுத்து ஹிந்தியில டப் பண்ணி வெளியிட்டாங்க. 'ஆர் ஆர் ஆர்' படத்தை ஹிந்தி - தெலுங்குல எடுத்து தமிழில் டப் பண்ணி வெளியிடுறாங்க. 'ஜெய் பீம்' பேன் இந்தியா ரிலீஸ்தான். பேன் இந்தியா படமல்ல. பேன் இந்தியா கன்டன்ட் உள்ள நிறைய படங்களை நாம எடுக்கிறோம். ஆனால், அதை வணிக ரீதியா யோசிச்சு பேன் இந்தியா படமா உருவாக்குறதில்லை. இப்போதான் நம்ம ஹீரோக்கள் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் தமிழ் சினிமா வணிகரீதியா போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு. பார்ப்போம்'' என்றார் நம்பிக்கையுடன்!

    மொத்தத்தில் சினிமாவுக்கான சந்தையும் விரிகிறது; பார்க்கும் ரசிகர்களும் பெருகுகிறார்கள்!

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp