மனிதர்கள் குடிக்க , விவசாயத்துக்கு, தொழிலுக்கு என ஆற்றுநீர் பங்கீடு குறித்து நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அதனால்தான் மூன்றாம் உலகப் போரானது தண்ணீருக்காக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கடல் உள்வாங்கி நிலப்பரப்பு வெளியில் தெரிகிறது. சில மணி நேரங்கள் கழிந்து பழையது போல கடல் மட்டம் உயர்ந்து நிலம் கடலுக்குள் செல்கிறது.
உலகின் கடல் வர்த்தகம் நடக்க உதவியாக இருக்கும் இரண்டாவது கால்வாயான பனாமா கால்வாயில் கடல், ஆறு, கடல் என்று மூன்று நிலைகள் உள்ளன. அதாவது, பசிபிக் சமுத்திரத்தையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைப்பதுதான் பனாமா கால்வாய். கால்வாயில் உள்ள நதிநீரின் அளவு நீர் அளவு குறைந்து கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கோடைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைவது சகஜம்தான். ஆனால் இன்னும் கோடைக்காலம் தொடங்க சில மாதங்கள் இருக்கும் நிலையில், பனாமா கால்வாயில் நீர் இருப்பு குறைந்துள்ளது. கால்வாயில் தேக்கப்பட்டிருக்கும் நீர் காதுன் ஏரிக்குச் சொந்தம். இப்போது காதுன் ஏரியின் நீர் மட்டம் சுமார் 5 அடி குறைந்துள்ளது. கால்வாய் வெட்டப்பட்ட 110 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது முறையாக பனாமா கால்வாய் நீர்மட்டம் குறைந்துள்ளது.
மழை சரிவர பெய்யாததும், காலநிலை மாற்றமும்தான் இந்த வறட்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கின்றன. நீர்மட்ட அளவு இரண்டாவது முறையாகக் குறைந்தது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான். முதன்முறையாக கால்வாய் வறண்டது. இதனால், உலக வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
கால்வாயில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை தற்சமயம் முப்பத்து ஆறிலிருந்து 24-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பயணிக்கும் கப்பல் தரை தட்டாமல் இருக்க கப்பலில் குறைந்த அளவு சரக்குகளை மட்டுமே ஏற்றவேண்டும் என்ற கட்டுப்பாடும் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் அளவு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்னை காரணமாகவும், ஹெளதி போராளிகள் சரக்கு கப்பல்களைக் குறி வைத்து தாக்குவதால் சூயஸ் கால்வாயிலும் சரக்குக் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது.
பனாமா கால்வாயிலும் சரக்குக் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது, உலகப் பொருளாதாரத்தை பெரிய சிக்கலில் சிக்கவைத்துள்ளது. அதனால் உலகளாவிய விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். தண்ணீர் மட்டம் மேலும் குறைந்து, பனாமா சரக்கு கப்பல் போக வர இயலாமல் போனால், சரக்கு கப்பல்கள் வேறு வழியாகவே கண்டங்களை சுற்றி அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் உலக அளவில் விலைவாசி ஏற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.