
கண்டது
(தேனியில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'அப்பா கடவுள் தந்த பரிசு.
அம்மா பரிசாக வந்த கடவுள்!''
-ச.அரசமதி, தேனி.
(நாமக்கல் அருகேயுள்ள ஊரின் பெயர்)
'புலவர்பாளையம்''
-கு.பாலசுப்பிரமணி, இடையகோட்டை.
(மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஊரின் பெயர்)
'கோழிகுத்தி''
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
கேட்டது
(செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் இரு பக்தர்கள்)
'திரை போட்டுள்ளதே.. இப்போது வணங்கு
கிறீர்கள்.. சாமிக்கு எப்படி தெரியும்?''
'ஐயா.. சாமிக்கு நான் தெரியும். என் மனசுக்கு சாமி தெரியும்...''
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
(கோவை சாயிபாபா காலனியில் இருவர்)
'காலையில் இருந்து உங்க சொந்தக்காரங்க கடையில்தான் சாப்பிடுறீங்களா?''
'அக்கா கடையில் டீ வடை, அம்மா மெஸ்ஸில் டிபன், மாமா பிரியாணி கடையில் மதியம்.. நைட் டிபனுக்கு அப்பா சைவ உணவகத்துக்கு வந்துட்டேன்...''
-எம்.பி.தினேஷ், கோவை-25.
(திருச்சியில் உள்ள பாஸ்ட் ஃபுட் கடை ஒன்றில்..)
'ஒரு 'நூடுல்ஸ்'க்கு இவ்வளவு நேரமா?''
'போட்டுத் தரணும் இல்லே...?''
'அப்போ... பாஸ்ட் என்ற பெயரை எடுத்திடுங்க?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
நம் வாழ்க்கைக் கதையை நாமே திரும்பிப் பார்த்தால், சுயசரிதம்.
மற்றவர்கள் திரும்பிப் பார்த்தால் வரலாறு.
-பா.சக்திவேல், கோயம்புத்தூர்.
மைக்ரோ கதை
அந்த ஊரின் இரட்டை பனை மரத்தின் அருகே இருந்த வீட்டின் முன் நின்று, 'அம்மா தண்ணீர் கொடுங்க?'' என்று கேட்டான் கோவிந்தன். வெளியே வந்து பார்த்த பெரியவர் தன் பேரனிடம், 'டேய் தண்ணீர் கொண்டு வந்து கொடு'' என்றார். உள்ளே சென்ற அவன், தாத்தா எப்போதும் குடிக்கும் சில்வர் டம்ளரில் பானை நீரை எடுத்து வந்து தர, கோவிந்தனும் தண்ணீர் குடித்தான்.
தண்ணீர் குடித்து முடித்தவுடன் பேரனிடம் தாத்தா, 'வேற டம்ளர் இல்லையா? என்னோட டம்ளர்தான் கிடைச்சுதா?'' என்று சீறினார். அதிர்ந்த கோவிந்தன், 'ஐயா நான் பாத்திரங்களுக்குப் பெயர் வெட்றவனுங்க? பாத்திரங்களை காலில் வச்சு அழுத்திப் பிடிச்சிதான் பெயரை எழுதுவேன். எச்சிலைவிட சுத்தம்தான் முக்கியம்'' என்றான். இதைக் கேட்ட அந்தப் பெரியவர் வெட்கிப் போனார்.
-ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
எஸ்.எம்.எஸ்.
பொய்கள் சேதாரம் இல்லாமல் தங்கத்தை மின்னுவதால்தான் உண்மைக்கு ஆதாரம் எப்போதும் தேவைப்படுகிறது. -பத்மா
சாரதி, தஞ்சாவூர்.
அப்படீங்களா!
புறாக்கள், யானைகள் போன்றவை காற்று அலை வாயிலாக, தங்கள் கூட்டத்தினர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி சென்சாரை பயன்படுத்தி இயங்கும் ரோபோ ஒன்றை சென்னையில் உள்ள ஐஎம்எஸ்இ (கணித அறிவியல், பயிற்சி மையம்),, மும்பை, மாண்டியில் உள்ள ஐஐடி விஞ்ஞானிகள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
'ஒரு மி.மீ. அளவே கொண்ட ரோபோக்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். வானில் எவ்வளவுத் தூரம் வேண்டுமானாலும் பறந்து வரும்போது தகவல்களைச் சேகரித்துகொண்டு திரும்ப வரும். இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகளின்போது மனிதர்கள் இருக்கும் இடத்தை அறியவும், எதிரி நாடுகளில் இந்தியர்கள் சிக்கும்போது அவர்களை மீட்கவும் பேருதவியாக இருக்கும்'' என்கிறார் விஞ்ஞானி அரணாப் பால்.
-ஆறு.சுப்பிரமணியன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.