ஒரு விஷயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் பலரும் ஒன்றிணைந்து வாட்ஸ் ஆஃப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் தகவல் பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர். அதன்படி, கர்நாடக இசை, திரை இசையில் ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து உருவாக்கிய குழுதான் 'இசை புதிது'.
இதில் உறுப்பினர்களாக உள்ள 60 பேர் தங்கள் குழுவின் இரண்டாவது ஆண்டு விழாவை சென்னையில் அண்மையில் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதுகுறித்து குழுவின் நிர்வாகிகள் சாந்தி ரஸவாதி, நாகேந்திர பாரதி, ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர் விருகை சங்கரன் ஆகியோர் கூறியது:
'எங்களுடைய 'இசை புதிது' குழு ஆரம்பித்த விதமே சுவாரசியமானது. ரம்யா வாசுதேவன் தன்னுடைய 'அண்டர் த ட்ரீ' என்ற அமைப்பின் மூலமாக டிஜிட்டல் தளங்களில் கதைகள் சொல்லிவருபவர். அவர் ஒருமுறை தி.ஜானகிராமனின் 'செய்தி' என்னும் கதையை சொன்னார். அதில் 'சாமா' ராகத்தில் 'சாந்தமுலேகா' கீர்த்தனையைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டன. ஒருவர் அதைப் பற்றி தன் சந்தேகங்களைக் கேட்க, வேறு ஒருவர் அதற்கு விளக்கம் அளிக்க, அந்த இசை விவாதம்தான் 'இசை புதிது' என்ற வாட்ஸ் ஆஃப் குழு.
இசை ஆர்வம் கொண்டவர்களைக் கொண்டு, எழுத்தாளரும், கவிஞருமான அழகிய சிங்கர் இந்தக் குழுவை உருவாக்கினார்.
இந்தக் குழுவில் கர்நாடக சங்கீதம், திரையிசை என்று இரண்டுக்கும் களம் அமைத்துள்ளோம்.
பணி ஓய்வு பெற்றவர்களே பெருமளவு அங்கத்தினர்களாக இருக்கும் இந்தக் குழுவில் தினமும் ஒரு ராகம் குறிப்பிடப்படும். அந்த ராகத்தில் அங்கத்தினர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். தினமும் காலை வேளையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பக்தி இசையும், பிற்பகலில் திரையிசைப் பாடல்களும் என்று நெறிமுறை வகுத்து, அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்.
இரண்டாம் ஆண்டு கொண்டாடும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். பாகவதரின் 'சிவகவி' படப்பாடலான 'அம்பா மனம் கனிந்து..', 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 'காற்றினிலே வரும் கீதம்...', சித் ஸ்ரீராமின் 'கண்ணான கண்ணே...' வரை தமிழ்த் திரையுலகின் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த மொத்தம் 23 பாடல்களை குழுவைச் சேர்ந்தோர் தனித்தும், இணைந்தும் பாடி அசத்தினார்கள். அவரவர்க்குரிய பாடல்களைப் பாடி பயிற்சி செய்ததுடன், இசைக் கருவிகளோடு இசைந்து பாடிட ஒத்திகையும் நடைபெற்றது.
பாடல்கள், பாடகர்கள் , இசை அமைப்பாளர்கள் பற்றி எல்லாம் பல சுவையான, அரிய தகவல்களை தனது இணைப்புரையில் கூறி நிகழ்ச்சிக்கு சுவை கூட்டினார் இந்திரா ராமநாதன். உதாரணமாக, கே.பி.எஸ். பற்றிச் சொல்லும்போது, 'கே.பி.சுந்தராம்பாள்தான் அரசியலில் பிரவேசித்த முதல் தமிழ் திரைப்பட நடிகை. அவர், தமிழ்நாடு மேலவை உறுப்பினராகவும் இருந்தார்' என்றும் குறிப்பிட்டார்.
'கிருஷ்ண சரிதம்' என்ற தலைப்பில் ரம்யா வாசுதேவன் சங்கீத உபன்யாசம் செய்தபோது, இடையிடையே பொருத்தமாக சில கர்நாடக இசைப் பாடல்களும் இடம்பெற்றன. அவற்றை நேரடியாக மேடையில் உறுப்பினர்கள் பாடியது வித்தியாசமாக இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே பெங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து பலரும் வருகை தந்திருந்தனர்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.