

நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பள்ளிக்கு அடுத்த வீடு செல்வராஜ், ராமதாஸ் என்ற என் நண்பர்களான பொன் நகை செய்யும் பத்தர் வீடு. வழக்கம் போல அந்த வீட்டிற்கு சென்று அவர்களுடன் பள்ளிக்குப் போவது என் பழக்கம்.
அன்றும் அதே எண்ணத்துடன் சென்ற நான், அந்த வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. வாசலில் ஒரே கூட்டம். பாதுகாப்புக்கு போலீஸ் அது இது என்றெல்லாம் கிடையாது. வீட்டுக் கதவை சாத்தி விட்டார்கள். அவர்கள் வீட்டுக்குப் பாகவதர் வந்திருக்கிறார் என்று செய்தி சொன்னார்கள். அந்த வயதில் எனக்குப் பாகவதர் யார் என்று தெரியாது.
அன்று பள்ளிக்கு வந்த ராமதாஸிடம் கேட்டேன். காரைக்குடியிலில் ஏவி.எம் அவர்களின் ராம விலாசம் தியேட்டர் அருகே சண்முக விலாஸ் தியேட்டரில் நாடகம் நடத்த வந்திருந்த பாகவதரைப் பற்றி சொன்னான்.
பாகவதரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் எனக்குள் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. அன்று குதிரை வண்டியில் ஒலி பெருக்கி பொருத்தி அவரது நாடகம் 'பவளக்கொடி' பற்றி விளம்பரப்படுத்தினார்கள்.
ஆரம்பப் பள்ளி முடித்து ஏவிஎம் சரவணன் சார், எஸ்.பி.முத்துராமன் அண்ணன், வள்ளல் அழகப்ப செட்டியார் உள்பட எல்லோரும் படித்து நூற்றாண்டு கண்ட மீனாட்சி சுந்தரேஸ்வர் உயர்நிலைப்பள்ளி என்ற எஸ்.எம்.எஸ்.விக்குப் படிக்கப் போன போது, என் 12-ஆவது வயதில் காரைக்குடியிலிருந்து தினமும் திருச்சிக்கு இரண்டு தடவைகள் ட்ராம் என்று அழைக்கப்பட்ட சிறிய ரயில் ஓடியது.
நாங்கள் நாலைந்துப் பள்ளி நண்பர்கள் அதில் திருச்சி சென்று வேடிக்கைப் பார்த்துத் திரும்பி வரலாம் என்று முடிவெடுத்தோம். காரைக்குடி திருச்சிக்கு அந்தக் காலத்தில் கட்டணம் சிலஅணாக்கள்தான். என் வீட்டில் என் அப்பா அனுமதி தராத நிலையில் அழுது புரண்டு சம்மதிக்க வைத்து அந்த இரண்டு மணி ரயில் பயணத்தில் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த ட்ராம் ரயில் கிட்டத்தட்ட 15 ஊர்களில் நின்று செல்லும்.
அந்த ரயில் திருச்சி அடைந்ததும் இறங்கினோம். அந்த ட்ராம் வண்டி திரும்பிக் காரைக்குடிக்கு மாலைதான் புறப்படும். அதுவரை திருச்சி ரயில்வே ஸ்டேஷனில்தான் இருக்க வேண்டும். வெளியே சென்று சுற்றிப் பார்த்துச் செலவழிக்கக் காசும் இல்லை. வயதும் இல்லை.
இங்குதான் ஒரு ஓரமாக மரப் பெட்டியின் மேல் கண்பார்வை குறைந்தவராக கறுப்பு கண்ணாடி போட்டியிருந்த நிலையில் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம். கே. தியாகராஜ பாகவதரைச் சந்தித்தேன். யார் என் பக்கத்தில் இருப்பது? என்று கேட்டார். ' ஸ்டேஷன் வெளியே கொண்டு விடுங்க' என தனது கையை நீட்டினார். அவர் கையைப் பிடித்து அவரை ஸ்டேஷன் வெளியே கொண்டு போய் விட்டோம்.
என் ஆரம்பப் பள்ளி நண்பன் ராமதாஸ் வீட்டின் முன்னே அவரைப் பார்க்க நின்ற கூட்டம் நினைவுக்கு வந்தது. அவர் நடித்து தயாரித்த 'புது வாழ்வு' என்ற படம் ஒன்றுதான் நான் பார்த்த படம். அதனால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
நான் திரை உலகில் பிரவேசித்துக் கதாசிரியனாக வலம் வந்த போது அடிக்கடி கதாசிரியர் இயக்குநர் மா. லட்சுமணனைச் சந்திப்பேன். அவர் அண்ணாவுடனும் பாரதிதாசனுடனும் நெருங்கிப் பழகியவர். அவர் ஒரு நாள் என்னிடம் ' காரைக்குடி, பாடாத பாட்டெல்லாம் பாடினார் பாகவதர். எழுதாத எழுத்தெல்லாம் எழுதினார் இளங்கோவன். இருவரையும் தமிழ் சினிமா தரையில் நீச்சலடிக்க விட்டது' என்றார்.
அவர் இப்போது இல்லை. ஆனால் அவர் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது.
1937-ஆம் ஆண்டில் கொக்கோகோலா நிறுவனம் தங்கள் கம்பெனி விளம்பரத்தில் நடிக்கப் பாகவதருக்கு லட்ச ரூபாய் தருவதாக சொன்னார்கள். அதன் மதிப்பு இன்று பல ஆயிரம் கோடி. அந்தக் கம்பெனிக் காரர்களிடம், 'எனக்கு வாழ்வு தந்த தமிழ்நாட்டில் சிறு சிறு முதலீட்டில் நடக்கும் குளிர் பான நிறுவனங்கள் உங்களுக்கு நான் விளம்பரம் தந்தால் பாதிக்கப்படும். அதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டார்.
மூன்று தீபாவளிகள் தொடர்ந்து ஓடிய 'ஹரிதாஸ்' என்ற இமலாய வெற்றிப் படத்தின் கதாநாயகனா இவர்?
கடைசியில் காவேரிக்கரையில் அநாதையாக இறந்து கிடந்தார். தன் தாய்க்குப் பக்கத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தன் சமாதி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். நிறைவேற்றினார். விதி கொடுமையானது. காலம் வலிமையானது. இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.