தமிழ்நாட்டில் உள்ள கோயில் கும்பாபிஷேகங்கள், முக்கிய திருவிழாக்கள் போன்ற மேடைகளில் பாடி பக்தர்களைப் பரவசப்படுத்தி வருபவர் நான்காம் வகுப்பு மாணவி தியா. இதோடு, 'கந்தன் அலங்காரம்', 'திருப்
புகழ்', 'தேவாரம்', 'திருவாசகம்', 'கந்த சஷ்டி கவசம்', 'கந்த புராணம்', 'சுந்தர் அனுபூதி' போன்றவற்றை பாடல்களாகவும், அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகிறார்.
'குட்டி கே.பி.சுந்தரம்பாள்', 'இசைக்குயில்', இறையருட்செல்வி', 'ஞானத்திறைவி' , இங்கிலாந்து நாட்டின் 'குளோபல் எக்ஸலன்சி விருது', 'இளம் சாதனையாளர்' உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற அவரிடம் பேசியபோது:
'சென்னை போரூரில் நாங்கள் வசிக்கிறோம்.
கிருகம்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் தற்போது நான்காம் வகுப்பு படிக்கிறேன். 3-ஆம் வகுப்பு தேர்வில் நான் கிரேடு பெற்றேன்.
என் பாட்டி எனக்கு நாள்தோறும் பக்திப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 'முத்தைத்தரு பத்தித் திருநகை....' பாடல்தான் முதலில் கற்றேன். தொடர்ச்சியாக, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.செளந்தர்ராஜன், கே.பி.சுந்தரம்பாள் போன்றவர்களின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். இதனைப் பார்த்த என் வீட்டில் கர்நாடக சங்கீதப் பயிற்சியைக் கற்று தரத் தொடங்கினர்.
மதுரை பூங்கா முருகன் கோயிலில் நடந்த வைகாசி விசாகத்துக்கு கச்சேரி வாய்ப்பை அளித்து, பாட வைத்தனர். நான் எப்போது பாடினாலும் அம்மா-பாட்டி இரண்டு பேரும் மேடைக்கு கீழே நின்று கவனிப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, பாராட்டுவார்கள். வீட்டுக்கு வந்தவுடன், 'தங்கம் இன்னும் கொஞ்சம் நன்றாகப் பாடி இருக்கலாமே?' என்று ஒரு சில வார்த்தைகள் சொல்வார்கள். அடுத்த முறை கண்டிப்பாக அதனை சரி செய்து கொள்வேன்.
யாராவது நிகழ்ச்சி அமைப்பாளர்கள், 'சின்னப் பொண்ணு ரொம்பவே நல்லாவே பாடியது' என்று பேசினால் போதும். உடனே மீண்டும் பாட்டியிடம் இருந்து ஒரு முத்தம் கிடைக்கும்.
பழனியில் நடைபெற்ற உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், பெங்களூரு ரமணி பாடி பிரபலமான 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...' என்ற பாடலைப் பாடினேன். அப்போது பெரிய அளவில் புகழ் பெற்றேன்.
முக்கிய ஆளுமைமிக்க பேச்சாளர்களுடன் சேர்ந்து குடமுழுக்கு, கோயில் திருவிழாக்கள், சமயச் சொற்பொழிவு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சென்று வருகிறேன். அந்த வகையில் வடபழனி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை, உத்தரகோசமங்கை, சமயபுரம் போன்ற மிக பிரபலமான கோயில்களில் பாடி இருக்கிறேன். திருச்செந்தூர் குடமுழுக்கு எனது நூறாவது மேடை. தற்போது 104 மேடைகள் ஏறியாகி விட்டது.
இசையைத் தாண்டி புத்தகங்கள் மீது அதிக விருப்பம். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை படிப்பதிலும் ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு' என்கிறார் தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.