வனுஅட்டு...

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவிலிருந்து தப்பியோடி பிரிட்டன் உட்பட பல நாடுகளில் அடைக்கலம் புகுந்து, தற்போது வனுஅட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
வனுஅட்டு...
Updated on
1 min read

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவிலிருந்து தப்பியோடி பிரிட்டன் உட்பட பல நாடுகளில் அடைக்கலம் புகுந்து, தற்போது வனுஅட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். அவர் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யுமாறு அனுமதியும் கோரியுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், வனுஅட்டுவின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். வனுஅட்டு நாட்டின் இன்றைய மக்கள் தொகை சுமார் 3 லட்சம் பேர்.

பணக்காரர்கள் தாங்கள் இந்தியாவில் சம்பாதித்துவிட்டு, வெளிநாட்டில் குடியுரிமையைப் பெற்று அங்கு நிரந்தரமாக தங்குவதுடன்,தங்கள் சேமிப்புப் பணத்தையும் பாதுகாப்பாக வைத்துகொள்கின்றனர்.

வனுஅட்டுவில் தனி நபர் வரி, மூலதன ஆதாய வரி, பரம்பரை வரி, செல்வ வரி.. என எதுவும் கிடையாது. இங்கு குடியுரிமை பெற வேண்டுமானால், இந்திய ரூபாயில் சில கோடி கட்டினால் போதும்.

85-க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்த நாட்டில் 65 தீவுகளில் மட்டும்தான் மக்கள் வசிக்கின்றனர். மிகப் பெரிய தீவான எஸ்பிரிட்டு சரண்டோ, 3, 955 சதுர கி.மீ. பரப்பளவை உடையது. நாட்டின் மொத்த பரப்பளவில் 32 சதவீதம் இந்தத் தீவில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே, நியூஸிலாந்துக்கு தெற்கே தென் பசிபிக்கில் உள்ள தீவு குடியரசு நாடு இது. முதலில் போர்த்துக்கீசியர்கள், பிறகு பிரான்ஸ் அதன் பின் பிரிட்டன் நாடுகள் என அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தின. பின்னர், இங்குள்ள தீவுகளை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு ஆண்டனர்.

இங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்து, உள்ளுர் மக்களைப் பாடாய்படுத்தி, கொப்பரை தேங்காய், கோகோ, மிளகு பிரிவைச் சேர்ந்த காவா என்ற பயிர் பயிரிட்டு அதிலிருந்து மயக்க மருந்து, பானம் தயாரித்து விற்பனை செய்தனர். கால்நடைகளை மாமிசத்துக்காகவே வளர்த்து, அதை ஏற்றுமதி செய்தனர்.

1970-இல் தீவில் மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது. பலன் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் இணைந்து கையெழுத்து போட்டு சுதந்திரத்தை அளித்தனர். 1980-ல் குடியரசு நாடானது.

தேர்தல்கள் நடந்து ஆட்சி அமைத்தாலும் நிம்மதியாய் ஆளவிடாமல் தொந்தரவு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலேயே இன்று வரை தொடருகிறது. இதை மீறி இந்த நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் வாழ்கிறது.

கரடுமுரடான மலைகள், உயரமான பீடபூமி, தாழ்வான பீட பூமி, உருளும் மலைகள், கடற்கரையில் பவள பாறைகள், இரண்டாம் உலகப் போரின்போது இந்தப் பகுதியில் மூழ்கியுள்ள கப்பல்கள்.. போன்றவற்றால் இந்நாடு சிறப்புமிக்கவை. மழைக்காடுகளும் உள்ளன.

இங்கு செயலில் உள்ள எரிமலைகள் நிறைய வெளியிலும் தண்ணீருக்குள்ளும் இருக்கின்றன. இவற்றில் ஒரு எரிமலை 800 ஆண்டுகளாக லாவாவை கக்கிக் கொண்டிருக்கிறது. தலை நகர் போர்ட் விலா நகரமானது 900 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு வசிப்போர் 50 ஆயிரம் பேர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com