'போல்வால்ட்' ஜாம்பவான் மோண்டோ டுப்லாண்டிஸ் 'மோண்டோ கிளாசிக்' போட்டியையும், தடகள ஓட்ட வீராங்கனை கீலி ஹாட்க்கின்சன் 'கீலி கிளாசிக்' போட்டியையும், கென்ய தொலைதூர ஓட்ட வீரர் கிப்சோஜ் கெய்னோ 'கிப் கெய்னோ கிளாசிக்' போட்டியையும் நடத்திவருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து, 'போல்வால்ட்' போட்டியை நீரஜ் சோப்ரா 'என்.சி. கிளாசிக்' என்ற பெயரில் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் மே 24-இல் போட்டியை நடத்துகிறார். இந்தியாவில் எந்த விளையாட்டு வீரரும் தனது பெயரில் போட்டியை நடத்தாத நிலையில், நீரஜ் சோப்ரா இந்த வழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியது: 'ஒலிம்பிக்ஸ், சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள நான், என்.சி. கிளாசிக் நிகழ்ச்சியால் விளையாட்டுத் துறைக்கு எனது பங்களிப்பைச் செய்ய முடியும் என நம்புகிறேன். இதுபோன்ற போட்டி ஆண்டுதோறும் நடைபெறும். வரும் ஆண்டுகளில் நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், ஸ்டீபிள்சேஸ், ஆண்கள் 100 மீட்டர் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவோம்.
மே 24-இல் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஈட்டி எறிபவர்கள் இந்திய விளையாட்டு ஆர்வலர்களின் கண்களுக்கு முன்பாக ஈட்டி எறிவதைக் காண்பார்கள். இது உலக தடகள ஓட்ட நிர்வாகக் குழுவால் முக்கிய நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 முதல் 21 வரை டோக்கியோவில் நடைபெற உள்ள 'உலக தடகள சாம்பியன்ஷிப்' போட்டிகளுக்கான முன்னுரையாக 'என்.சி. கிளாசிக்' அமையும்.
கிரெனடாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், கென்யாவைச் சேர்ந்த ஜூலியஸ் யெகோ, 2016 ரியோ ஒலிம்பிக் சாம்பியனும் ஜெர்மனியைச் சேர்ந்தவருமான தாமஸ் ரோஹ்லர், 2023 பான் அமெரிக்கன் கேம்ஸ் சாம்பியன் கர்டிஸ் தாம்சன் உள்ளிட்டோர் வீரர்கள் பங்கேற்கின்றனர். உலக போல்வால்ட் சாம்பியன்களுடன், உலகப் போட்டி தரவரிசைப் புள்ளிகளைப் பெற இந்திய வீரர்களுக்கும் அரிய வாய்ப்பாக அமையும். இந்த நிகழ்ச்சியைக் காண அனுமதி சீட்டு வாங்க வேண்டியிருக்கும்.
'செக்' குடியரசைச் சேர்ந்த புகழ்பெற்ற உலக சாதனையாளரும் எனது பயிற்சியாளருமான ஜான் ஜெலெஸ்னி சொன்ன யோசனைதான் 'என்.சி. கிளாசிக்' என உருவம் பெற்றுள்ளது. முதலில் நிகழ்ச்சியை ஹரியானாவில் 'பன்ச்குலா' மைதானத்தில் நடத்த நிச்சயித்திருந்தோம். நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பப்படுவதால், அந்த மைதானத்தில் உலகத்த தர ஒளிபரப்புக்கான வெளிச்சம் போதாது என்று சொல்லப்பட்டது.
மே மாதத்தில் பன்ச்குலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும். பெங்களூரில் காலநிலை எனது நிகழ்ச்சிக்கு ஒத்துழைக்கும். இதுதவிர, உலகத் தர ஒளிபரப்புக்குத் தேவையான விளக்குகள் 'கண்டீரவா' மைதானத்தில் இருக்கிறது என்கிறார் நீரஜ் சோப்ரா.
இருபத்து ஏழு வயதான நீரஜ் சோப்ரா, முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோரை 2025 ஜனவரி 16-இல் மணந்தார். ஹிமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் மூன்று நாள்கள் கழித்தே தெரியவந்தது. நீரஜின் குடும்பத்தினர் பெயருக்கு ஒரு ரூபாயை மட்டுமே வரதட்சிணையாகப் பெற்றனர்.