இந்தியாவில் ஏழாயிரத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்கள் உள்ளன. மேகாலயாவில்கூட ரயில் வந்துவிட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சில ரயில் நிலையங்களின் பெயர்கள் விசித்திரமானவை.
உதாரணத்திற்கு இதோ சில ரயில் நிலையங்கள்.
சோட்டிகாது
ராஜஸ்தான் திவ்வானா-குச்சாமா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் சோட்டிகாது (சின்னகாது). ஒற்றை நடை
மேடையைக் கொண்டது. ஆனால், பெரிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்கூட இங்கு நின்று செல்கின்றன. காரணம் இங்கு இறங்கித்தான் சாதுஸ்யாம் கோயிலுக்குச் செல்வர்.
பீமனின் பேரனும், கடோத்கஜனின் மகனுமாகிய பார்பரிகாவுக்கு இங்கு கோயில் உள்ளது. மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் முன் யுத்தம் பாண்டவர்களுக்கு சாதகமாய் முடிய தன்னையே பலிகொடுத்துக் கொண்ட தியாகி அவன்.
உண்மையில் பார்பரிகா வீரமிக்கவன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவன். கெளரவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்கள் பக்கம் சேர்ந்தால் பஞ்சபாண்டவர்கள் நிலை மோசமாகிவிடும் என்பதால் இவன் பலி முன்பே நிகழ்த்தப்பட்டது.
தாரு
தாரு என்றால் ஹிந்தியில் மது. பெயரைக் கேட்டால் சிரிப்பு வரும். ஆனால், ஊருக்கும் மதுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜார்கண்ட்டின் ஹசார்பாக் ஜில்லாவில் ஹசாரிபாக் ரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள சிறிய ஸ்டேஷன்.
காலாபக்ரா
ஹிந்தியில், பஞ்சாபியில் 'கருப்பு ஆடு' எனப் பொருள்படும். இந்த ரயில் நிலையம் ஜலந்தருக்கு அருகில் உள்ளது.
சாலி
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம். சாலி என்றால் 'மைத்துனி' எனப் பொருள். ஜெய்பூர் டிவிஷனில் உள்ள இரு நடைமேடைகள் மற்றும் சகல வசதிகளும் கொண்ட நிலையம் இது.
சிங்கப்பூர் சாலை
இது சிங்கப்பூர்அருகில் இல்லை; ஒடிஸ்ஸாவில் உள்ளது. முதல் தடவையாகப் படிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். இதன் அருகில் சிங்கபுரம் என ஒரு நகரம் உள்ளது. அந்நகருக்குச் செல்ல இங்கு இறங்கவேண்டும். சிங்கபுரம் ரோடு என்பது திரிந்து சிங்கப்பூர் ரோடு ஆகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.