பல மொழிகள், கலாசாரங்கள், நில அமைப்புகளுக்கு இந்திய நாடு எவ்வாறு பெயர் பெற்றதோ, அதே போன்று பலவகை பூக்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.
நீலக்குறிஞ்சி
தமிழ்நாடு, கர்நாடகம், கேரள மாநிலங்களைக் கடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலக்குறிஞ்சி அரிதாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். வித்தியாசமான நீல நிறத்தில் இருக்கும் இந்த மலர்கள் பூக்கும் மலைப் பகுதியானது பிரமிக்க வைக்கும் நீலக்கடலாக மாறும்.
கேரளத்தின் மூணாறு மலைகளில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரை பூக்கும். நீலக் குறிஞ்சியைக் காண 2030 வரை காத்திருக்க வேண்டும். வீடுகளில் நீலக்குறிஞ்சி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பிரம்ம கமல்
உத்தரகண்ட், இமாசலப் பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையே பூக்கும். 'பூக்களின் ராஜா' என்று போற்றப்படுகிறது.
இமயமலையில் அதிக உயரத்திலும் பூத்து அமானுஷ்ய அழகை வெளிப்படுத்துகிறது. பெரிய, வெள்ளை, தாமரை போன்ற இதழ்களைக் கொண்டிருக்கும் இந்த மலர் அரிதானது. ஆன்மிக முக்கியத்துவம் நிறைந்தது. இரவில் மட்டுமே பூக்கும்.
ரோடோடென்ட்ரான்
இமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலங்களைத் தாயகமாகக் கொண்ட இந்த மலர் மே முதல் ஜூன் வரையே பூக்கும். அடர் சிவப்பு அல்லது வெளிர் இளஞ்சிவப்பு வரையிலான நிறங்களில் மலைகளின் குளிர்ந்த, மூடுபனி பகுதிகளில் வெடித்து பூக்கிறது. இந்த மலர்கள் பனி மூடிய மலைகளின் பின்னணியில் மாயாஜால காட்சியை ஆண்டுதோறும் உருவாக்குகின்றன.
சகுரா
ஜப்பானின் புகழ்பெற்ற செர்ரி மலர்களைப் போலவே, சகுரா கோடையின் தொடக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கை அலங்கரிக்கிறது, மென்மையான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் நிலப்பரப்பை சொர்க்கமாக்குகிறது. இந்தப் பூக்களின் வாழ்நாள் சில வாரங்கள் மட்டுமே.
நீலத் தாமரை
உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 'நீலத் தாமரை' பூக்கிறது. கண் கவரும் நீல இதழ்களுடன், இந்திய கலாசாரத்தில் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. தூய்மை, ஆன்மிக விழிப்புணர்வைக் குறிக்கிறது. விடியற்காலையில் அதன் அழகு மனத்தைக் கவரும்.
சுடர் லில்லி
மேற்குத் தொடர்ச்சி மலைகள், கர்நாடகம், தமிழ்நாடு, அஸ்ஸாம், அந்தமான் உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சுடர் வில்லி பூக்கும்.
'குளோரி லில்லி' என்றும் அழைக்கிறார்கள். பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் இதழ்களைக் கொண்டுள்ளது. அவை வெளிப்புறமாக சுருண்டு, நெருப்பைப் போல இருக்கும். தமிழில் 'செங்காந்தள்' என்றும் 'கார்த்திகைப் பூ' என்றும் அழைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.