ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூலநோய் குணமாக...
நான் என் மனைவியுடன் அடிக்கடி மேற்கு ஆப்பிரிக்கா சென்று விடுவேன். நீண்ட விமானப் பயணம் காரணத்தினாலோ, அங்கு நிலவும் சூட்டினாலோ என் மனைவிக்கு உள் மூலம் ரத்தக்கசிவுடன் ஏற்பட்டு அவதியுறுகிறாள். இதற்கு ஆயுர்வேத முறைப்படி உணவும், மருந்தும் கூறமுடியுமா?
-பாலு , சென்னை.
ஆயுர்வேதத்தின்படி, மூல நோய் என்பது மலப்
பாதையில் திடீரெனத் தோன்றும் நோயல்ல; அது பசித்தீ, வாத, பித்த, கபம் தோஷங்கள்; ரஸ, ரத்தம் தொடங்கிய சப்த தாதுக்கள் ஆகியவற்றின் நீண்டகாலச் சீர்குலைவின் வெளிப்பாடு.
முதலில் பசிமந்தம் ஏற்படுகிறது. இதனால் உணவு முறையாகச் செரிக்கப்படாமல், ஆமம் எனும் மப்பு நிலை வயிற்றில் உருவாகி, குடல் இயக்கம் மந்தமாகிறது. இதன் விளைவாக மலச்சிக்கல் தோன்றுகிறது. மலவிடுதலில் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது.
இந்த அழுத்தம் காரணமாக வாத தோஷம் அதிகரித்து, மலப்பாதையின் உள்ளே உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் விரிவடைந்து தளர்கின்றன. அதே சமயம், காரம், வெப்பம், உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால் பித்த தோஷம் அதிகரித்து, ரத்தத்தில் கூடு மற்றும் அழற்சி உருவாகிறது. வாதத்தின் அழுத்தமும், பித்தத்தின் உஷ்ணமும் சேர்ந்து, மலப்பாதையின் மாமிச தாது வீக்கம் அடைந்து, மூலக் கட்டி உருவாகிறது. கப தோஷம் இணைந்தால், இந்த வீக்கம் மெதுவாகவும் கனமாகவும் வளர்கிறது. இதுவே உள் மூல நோயின் இரண்டாம் நிலை. மூலக் கட்டிகள் மலவிடுதலில் வெளியே வந்து, தானாகவே மீண்டும் உள்ளே சென்று விடும்.
விமானப் பயணத்தின்போது உடல் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் குடல் இயக்க மந்தம், நேரம் தவறிய உணவு, மனஅழுத்தம் போன்றவை வாத தோஷத்தை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, மலவிடுதலில் அதிக அழுத்தம் தேவைப்படுகின்றது.
மேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிக வியர்வை, உடல் வெப்பம் மற்றும் பித்த தோஷ அதிகரிப்பு காரணமாக ரத்தத்தில் உஷ்ணமும் அழற்சியும் உருவாகும். இவை அனைத்தும் சேர்ந்து, மலப்பாதையில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் மேலும் பலவீனமடைந்து உள் மூல நோயில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். வயது முதிர்வதால் மாம்ச தாது மற்றும் ரத்த தாதுவின் பலம் குறைவதும் இந்த பிரச்னையை அதிகரிக்கிறது.
ஆயுர்வேதத்தின்படி, முதலில் செரிமான அக்னியைச் சீராக்கி, ஆமம் உருவாவதைத் தடுக்க வேண்டும். அதே சமயம், மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைத் தவிர்ப்பதும், ரத்த பித்த உஷ்ணத்தைத் தணித்து, ரத்தக்
கசிவை நிறுத்துவதும் முக்கியமான சிகிச்சை நோக்கங்களாகும். இதற்கு மருந்துகளைவிட உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் முதன்மையான பங்கு வகிக்கின்றன.
ரத்தக் கசிவை நிறுத்துவதும் மலச்சிக்கலை அகற்றுவதும் முக்கிய அங்கம். உடனடி கை வைத்தியமாக உலர் திராட்சையை 8 -10 எடுத்து கொதிக்கும் நீரில் இட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் கசக்கிப் பிழிந்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இனிப்புச் சுவை, குளிர்ந்த வீரியம், நெய்ப்புத் தன்மை, மலமிலக்கல் போன்ற சிறந்த குணங்களால், நிவாரணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இங்கிருந்து மருந்துகளை வரவழைத்துச் சாப்பிட முடியுமென்றால் மாசிக்காய், ஆடாதோடை, குடகப்பாலை, கோலரக்கு, பருத்தி மரத்தின் கோந்து, அத்திக்காய், அரசம்பட்டை, நாவல் கொட்டை, மாங்கொட்டை, தொட்டாச்சிணுங்கி, திரிபலை போன்ற தரமான மூலிகைகளை ரத்தக்கசிவை நிறுத்துவதற்கு உதவக்கூடியவை. அதை நன்கு பொடித்து, துணியால் சலித்து, பத்திரப்படுத்தவும். சுமார் 3 - 5 கிராம் எடுத்து சிறிது நெய் குழைத்து காலை, இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிட்டு, அதன் மேல் சிறிது சூடாறிய பால் அருந்தவும்.
ஆயுர்வேதத்தில் விற்பனையிலுள்ள குடஜத் துகாதி லேகியம், குடஜாரிஷ்டம், திராக்ஷôதி கஷாயம், வாஸா குடூச்யாதி கஷாயம், பிரவாள பிஷ்டி, ஷதாவரிகுலம், புஷ்யானுகம் கூரணம் போன்ற மருந்துகள் தரமானவை. மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது
உணவுப் பழக்கங்களில் எளிமை மிக அவசியம். புழுங்கல் அரிசி கஞ்சி, காய்கறி சூப், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவுகின்றன. மிகப் புளிப்பில்லாத மோர் செரிமானத்தைச் சீர்செய்கிறது. தினமும் சிறிதளவு நெய் சேர்ப்பது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
ரத்தக்கசிவு தொடர்ந்து இருந்தால் உடல் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், ஆயுர்வேத மருத்துவரை நேரில் சந்தித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
