ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடித்து 175 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டவர் பதினான்கு வயதான வைபவ் சூர்யவன்ஷி. இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் வரலாற்றில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களில் இதுவே அதிகமானது. அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், 'வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார்' என்ற உறுதியை அளித்துள்ளார்.
இந்தத் தொடர் தொடங்கி முடியும் வரை வைபவ் சூரியவன்ஷி பிரமாதமாக விளையாடி முதலிடத்தில் இருந்து வந்தார். வைபவ் எடுத்த மொத்த ரன்கள் 439. அவரது ஸ்ட்ரைக் ரேட் 169 என இருந்தது. இறுதிப் போட்டியில் வைபவ் சூரியவன்ஷி எடுத்த சதம், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுக்க உதவியது. இளையோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு கிரிக்கெட் அணி எடுத்த அதிகபட்ச ரன்களும் இதுதான். இந்தியாவின் சவாலை எதிர் கொண்ட இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆக, இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரண வெற்றியைப் பெற்றது. இதுதவிர, இந்த சாதனைப் போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரராக வைபவ் சூரியவன்ஷி அவதாரம் எடுத்துள்ளார்.
அஷ்வின் பாராட்டு
'80 பந்துகளில் 175 ரன்கள் எடுப்பது எளிதான விஷயம் கிடையாது. இந்த சாதனை நம்ப முடியாதது. அரையிறுதியில் 300 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை நோக்கி விளையாடும்போது, வைபவ் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் வைபவ் சதம் அடித்துள்ளார். பெரிய போட்டிகளில் விளையாட வைபவ்வுக்கு முதிர்ச்சி வந்துவிட்டது. டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்திய சீனியர் அணிக்காக விளையாட வைபவ் சூரியவன்ஷிக்கு அழைப்பு வந்தால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை' என்று அஷ்வின் பெரிதும் பாராட்டியுள்ளார்.
வெற்றிக்குப் பரிசு?
இளையோர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசுத் தொகையை வழங்கவில்லை. இந்தத் தொடரை தொழில் ரீதியான போட்டியாகக் கருதாமல், இளம்வீரர்களின் திறமையை வளர்ப்பதற்கான போட்டித் தொடர் என்றே கூறுகிறது. இதனால்தான் வெற்றி பெறும் அணிக்கோ அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கோ ஐ.சி.சி. தனித்தனி பரிசுத் தொகையை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக, உறுப்பு நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஐ.சி.சி. தனி நிதியை வழங்குகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வழக்கமாக ஜூனியர் அணிகள் சாதனைகள் புரியும்போது ஆட்டக்காரர்களைக் கெளரவிக்க பரிசுத் தொகை வழங்குகிறது.
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி 2022-இல் உலகக் கோப்பையை வென்றபோது, பி.சி.சி.ஐ. ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.40 லட்சமும், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கியது. 2023, 2025-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிகளுக்கு மொத்தமாக ரூ.5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஊக்கத்தொகையை விரைவில் அறிவிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.