பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் சடையவேல் கைலாசம்.
பிரபல நீதிபதி கைலாசத்தின் மகன். தாயார் பிரபல கவிஞர் சௌந்தரா கைலாசம்.
தனக்குப் பிடித்த பத்து குறித்து டாக்டர் சடையவேல் இங்கு விவரிக்கிறார்:
குலதெய்வம் கோயில்: திருச்செங்கோடு அருகில் உள்ள இந்த பெரிய காண்டியம்மன் கோயில் தான் எனது குலதெய்வம். ஆண்டு தோறும் நான் ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு சென்று மொட்டை போடுவது வழக்கம். இதைத் தவிர எனது உறவினர்கள் போகும் போதெல்லாம் நானும் அவர்களுடன் செல்வேன். என்னை இன்றும் காப்பவள் அவளே.
நாய்க்குட்டி சங்கு காளி : என் வீட்டிற்கு நாங்கள் எதிர்பார்க்காமல் வந்த நாய்க்குட்டி சங்கு காளி. இன்று அந்த சிறிய நாய்க்குட்டி வளர்ந்து பெரியதாக இருக்கலாம். என் மனைவி மீரா சடையவேல் மறைந்த சமயம் என் வீட்டிற்கு வந்தது. நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னுடன் விளையாடி என்னை என் துக்கத்திலிருந்து பலமுறை வெளியே கொண்டு வந்த ஜீவன். அன்றிலிருந்து இன்று வரை எங்கள் வீட்டில் இதுவும் ஒரு உறுப்
பினராக மாறிவிட்டது என்றால் அது மிகை இல்லை.
அறுவை சிகிச்சை அறை: எனது "அஸ்வினி சௌந்தர்யா மருத்துவமனை'யில் உள்ள அறுவை சிகிச்சை அறை தான் என் கடவுள். இந்த அறையில் நான் செய்த எல்லா அறுவை சிகிச்சையிலும் வெற்றிதான் பெற்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் இந்த அறையில் நுழையும் போது எனக்குள் ஏதோ ஒரு சக்தி உள்ளே புகுந்துகொண்டு என்னை சரியாகச் செயல்பட வைக்கிறது என்று நான் நம்புகிறேன். என்னிடம் வரும் வியாதியஸ்தர்களின் நோய் தீர்ப்பதே என் முதல் வேலை என்று இன்றும் நினைக்கிறேன்.
மலேசிய நண்பர்கள்: என்னை மலேசியாவில் எங்கு இறக்கி விட்டாலும் எனக்கு கவலை இல்லை. நான் தைரியமாக திரும்பவும் என் அறைக்கே வந்து விடுவேன். அந்த அளவிற்கு என் மலேசிய நண்பர்களான பாரத் மணியன், முரு, ரவி ஆகியோர் என்னை சிறப்பாக பார்த்துக் கொள்வதுடன், மலேசியா முழுவதும் ஊர் சுற்றி இருக்கிறோம். அவர்களால் எனக்கு மலேசியா அத்துப்படி என்று தைரியமாகச் சொல்லலாம்.
நவகான பஜன மண்டலி: என் மனைவி மீரா மறைந்த போது நான் இடிந்து உட்கார்ந்து விட்டேன். என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையின் முடிவிற்கே சென்று விட்டது போன்ற ஒரு நினைப்பு. அந்த சமயம் என்னை ஆறுதலடைய செய்த விஷயங்கள் பல. அதில் இந்த நவகான பஜன மண்டலி முதல் இடத்தைப் பெற்றது என்று கூறலாம். 13 வயதில் இருந்து 17 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் பாடும் நாம சங்கீர்த்தனம் என்னை தெய்வீக உலகத்திற்கே அழைத்துச் சென்றது. இவர்கள் என்னைத் தேற்றுவதற்காக என் வீட்டிற்கே வந்து ஆண்டவனைப் பற்றி பாட, நான் சற்றே எழுந்து உட்கார ஆரம்பித்தேன்.
பிடித்த இடம்: பிரிட்டனில் உள்ள "ரோஸ்லேண்ட் பெனின்சுலா' என்று கூறப்படும் "போர்ட் லூயி' என்ற இடம் தான். நான் - - எனது மகள் காஞ்சி கைலாசம் - இருவருக்கும் மிகப் பிடித்த இடம். நாங்கள் இங்கு சென்றால் நடையும் பேச்சும் தான். சென்னை என்று இல்லாமல் நாங்கள் பல வெளிநாடு
களில் நடைப் பயணம் செய்துள்ளோம். பல மணி நேரம் இந்த நடையும் பேச்சும் தொடரும்.
இயற்கையோடு இணைந்து மிருகங்களை பார்ப்பது: மிருகங்களை சுதந்திரமாக காட்டில் திரிய பார்ப்பது பிடிக்கும். அவைகளை கூண்டில் அடைத்து வைத்து பார்ப்பதற்கு பிடிக்காது. அதனாலேயே நானும் என் மகளும் பல இயற்கை வனங்கள் உள்ள இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறோம். கென்யா, தான்சானியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, சாம்பியா, ஜிம்பாப்வே என்று அடுக்கிக் கொண்டே போகலாம். போட்ஸ்வானாவில் யானை துரத்தியதும், கென்யாவில் சிங்கங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டதும் மறக்க முடியாதவை.
நீச்சல் நிர்வாகம் : இன்று நான் சென்னை மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ் நாடு நீச்சல் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருப்பதற்கு காரணம் எனது மகள் காஞ்சி கைலாசம் தான். அவர் தனது 14 வயதுவரை நீச்சல் போட்டிகளில் பங்கு கொண்டார். அதில் உள்ள பல்வேறு தவறுகளால் நான் நீச்சல் நிர்வாகத்தில் நுழைய முடிவு செய்தேன். நீச்சலை என் மகள் விட்ட பின்னரும் நீச்சல் நிர்வாகம் என்னை விடவில்லை. என் தந்தையார் நீதிபதி கைலாசம் பெயரில் நாங்கள் நடத்தும் போட்டியில் பங்கு பெறும் குழந்தைகள் எல்லோருக்கும் பரிசு உண்டு. அவர்கள் பரிசுப் பையை தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்வதைப் பார்ப்பதற்காகவே இந்தப் போட்டியை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்.
நந்தி சிலை: நாங்கள் இருக்கும் இந்த வீட்டை கட்டி முடித்தவுடன் "வீட்டில் ஒரு நந்தி சிலை இருந்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்தேன். எனது தாயார் கவிதாயினி செüந்தரா கைலாசம் அவர்களை அழைத்து, "வீட்டில் நந்தி சிலை வைக்கலாமா?' என்று கேட்டேன். "வை' என்றார். ஒருநாள் எனது சகோதரி என்னை அதிகாலையிலே தொலைபேசியில் அழைத்து, "அந்த நந்தி சிலைக்கு தினமும் நீயே மாலை சாற்றி வா! இது என் கனவில் வந்தது!' என்றார்கள். சிலை வைத்ததுடன், தினமும் அதற்கு நானே அருகம் புல் மாலை சாற்றி பூஜை செய்கிறேன்.
மரம் நடுதல்: எங்கள் வீட்டில் மட்டுமல்ல; பல்வேறு இடங்களில் மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். எனது பிறந்த நாள், என் மனைவி மீரா மறைந்த நாள் என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நானும் என் மகளும் மரம் நடுவதை மறப்பதே இல்லை. என் வீடு, என்தாயாரின் வீடு மற்றும் பல்வேறு பொது இடங்களிலும் இந்த மரம் நடுதல் இன்றும்
தொடர்கிறது.