குஜராத் மாநிலத்தில் பாவ் நகரின் அருகில் உள்ளது கோலியாக் கடற்கரை. இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்கலங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இது, மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வழிபட்ட சிவனாலயம் என்பது ஐதீகம். மிகப்பெரிய சிவலிங்கமும், நந்தியும் கடலுக்கடியில் மறைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்களுக்கு கடல் நீர் விலகி வழிபாட்டுக்கு வழிவிடும் அதிசய நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி, கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இரு புறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.
-எம்.சி.ராஜேந்திரன்