சென்னை-திருநின்றவூர் அருகே காசுவா கிராமத்தில் அமைந்திருக்கும் "சேவாலயா' அன்பின் அடையாளம். இதன் நிறுவனத் தலைவர் முரளிதரன், டி.சி.எஸ். என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு, சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சேவாலயா அமைப்பைத் தோற்றுவித்தவர். எப்போதும் புன்சிரிப்புடன் பணிகளைச் செய்பவர்.
ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, ஆதரவற்ற முதியோருக்குப் பாதுகாப்பான இல்லம், பசுக்களுக்கு கோ-சாலை, உயர் கல்விக்கு கம்யூனிடி கல்லூரி என்று சமூக சேவை செய்து வருகிறார். இதுவரை, தமிழ் நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருது, மனித குலதுக்கு சேவை செய்வதற்காக சத்பால் மிட்டல் தேசிய விருது உள்ளிட்ட அறுபது விருதுகள் பெற்றிருக்கிறார். முப்பது ஆண்டு சேவையை சேவாலயா முடித்துவிட்ட இந்தத் தருணத்தில், அவர்கள் அதைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை வித்தியாசமாக செய்துள்ளார்கள். இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி அக். 27, மாலை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற உள்ளது.
-சித்தார்த்