மாதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மாஸ்க்'. கதாநாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷகானா நடிக்கிறார். வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்றாயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலா, ஷகிலா, கிங்காங் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் புதுகை மாரிசா. சென்றாயன், முனிஸ்ராஜா, பிளாக் பாண்டி, யோகி இந்த நால்வரும் நண்பர்கள். கிடைத்த வேலையைச் செய்து கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். உழைக்காமல் பணக்காரனாவது தான் இவர்களது லட்சியம். அப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஓர் உருவம் எதிரில் தோன்றி நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்க வேண்டும் என்றால், சுடுகாட்டில் இரவு எந்த ஆவி சமாதியை உடைத்துக் கொண்டு முதலில் வருகிறதோ அதை நீங்கள் பிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைக்க வேண்டும். மறுநாள் அந்த வீட்டில் போய் பார்த்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்று சொல்கிறது. பின் நடந்தது என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே கதைக்களம். சென்னையில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று பாடல் காட்சிகளுக்காக இம்மாத இறுதியில் படக்குழு மலேசியா செல்லவுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.