நடிகை பாவனா கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் நவீனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட மாட்டேன் என்று அப்போதே தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வழக்கம்போல் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் கன்னடத்தில் மட்டுமே 3 படங்களில் நடித்து வருகிறார். ஆனால் மலையாள படம் எதிலும் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து இனி கன்னட படங்களில் தான் பாவனா நடிப்பார் என்று பேசப்பட்டது. அதற்கு பதில் கூறும் வகையில் கேரளத்தில் நடந்த மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாவனா. விருது விழா நிகழ்ச்சியில் மேடையில் அவர் வண்ண உடைகள் அணிந்து நடனம் ஆடினார். இதன் மூலம் இன்னமும் மலையாள சினிமாவில் தான் தொடர்பில் இருப்பதை வெளிப்படுத்தினார். இதையடுத்து பல மலையாள இயக்குநர்கள் பாவனாவை அணுகி கதை சொல்லி வருகிறார்கள். "திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார்' என்று முன்னர் வந்த கிசுகிசுவை அடுத்தடுத்த படங்களில் நடிப்பதன் மூலம் பொய்யாக்கிய பாவனா, தற்போது மேடையிலும் தன்னால் நேரடியாக நடனம் ஆட முடியும் என்பதை புரியவைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறும்போது.... ""சினிமாதான் என் அடையாளம். திருமணம் ஆகிவிட்டதால் நடிப்பை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை. சினிமாவில் எந்த இடம் கிடைத்தாலும் அங்கு நான் இருப்பேன். மேடை நிகழ்ச்சியில் ஆட வேண்டும் என கேட்டார்கள். ஆடினேன். இதில் வேறு எதுவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.