இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு சமூக நல அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவற்றில், "நல்லோர் வட்டம்' என்ற அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதி "மாணிக்க மாணவர்' விருதினை வழங்கி வருகிறது.
கல்வியில் முதல் நிலை, நற்பண்புகள், தனித்திறன் ஆகியவற்றோடு சமூக கண்ணோட்டமும் கொண்ட மாணவர்களை அடையாளம் காணுவதே இந்த "மாணிக்க மாணவர்' விருதின் நோக்கம். நிகழாண்டில் குறைந்தது ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்க இலக்கு நிர்ணயித்துள்ள "நல்லோர் வட்டம்', ஜனவரி 12-ஆம் தேதி முதல் கட்டமாக 126 மாணவர்களுக்கு "மாணிக்க மாணவர்' விருது வழங்கியது.
இதற்கான விழா சென்னை ஆவடியில் நடைபெற்றது. விருதுகளின் நோக்கம் குறித்து பேசிய "நல்லோர் வட்டம்' ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், ""கடந்த நான்காண்டுகளாக இந்த விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டில் 1,000 மாணவர்களை இலக்கு வைத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் நூறு பள்ளிகளிலிருந்து இதுவரை 500 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். கோவையிலும் மாணிக்க மாணவர்களைத் தேர்ந்
தெடுத்து வருகிறோம். வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் 1,000 "மாணிக்க மாணவர்"களையும் தேர்ந்தெடுத்து பயிற்சியளிப்போம். தனியார் பள்ளிகளுக்கும் நாங்கள் சென்று வந்தாலும், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். வருங்காலத்தில் நல்ல தலைவர்களாக இந்த மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்'' என்கிறார் பெருமிதத்துடன்.
இது தவிர, மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், தூய்மை, அருமையான சுற்றுச்சூழலைக் கொண்டிருத்தல், ஆசிரியர்கள்-நிர்வாகம்-பெற்றோர் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் "கல்விக் கோயில்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆவடி காமராஜர் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி "கல்விக் கோயில்' எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விழாவிற்கு அம்பத்தூர் ஊருணி மையத்தின் தலைவர் இ.ந.சுதர்சனம் தலைமை தாங்கினார். "கல்விக் கோயில்' விருதினை ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் வி.நடராஜன் வழங்கினார். "மாணிக்க மாணவர்' விருதுகளை "பில்டிங் பாரத்' அமைப்பின் தலைமை பிரசாரகர் சத்யகுமார் வழங்கினார். இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, முந்தைய ஆண்டுகளில் "மாணிக்க மாணவர்' விருது பெற்ற மாணவ, மாணவிகள் முன்வந்து செய்திருந்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.