செங்கல்பட்டுக்கு அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிராமமான ஆத்தூரில், கல்யாண வரதராஜ பெருமாளுக்கு கோயில் உள்ளது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்த கிராமம் ஆத்தூர் என்றும், மூன்றாம் ராஜராஜசோழனை கெளரவிக்கும் விதமாக ராஜராஜ நல்லூர் என்றும் அழைக்கப்பட்டதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் வாசல் பகுதி மேற்புறம் வரையே கட்டப்பட்டுள்ளது.
வாசலுக்கு அருகே உள்ள ஒற்றைக்கல் தீபத் தூணின் அடியில் வீர ஆஞ்சநேயரின் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் கர்ப்ப கிரகம் கிழக்கு முகமாக அமைந்துள்ள போதிலும், அதன் வாயில் வடக்கு முகமாக இருப்பதால் பக்தர்கள் சுற்றி நடந்து வந்தே பெருமாளை தரிசிக்கின்றனர். உள்ளே, நான்கு பெரிய கரங்களுடன் கல்யாண வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக வீற்றிருக்கிறார். லட்சுமி தேவி இங்கு பெருந்தேவி தாயாராக வழிபடப்படுகிறார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி உள்ளது.
இந்தக் கோயிலில், விஷ்ணு கோயில்களில் பொதுவாக காணப்படாத வைகானாச மஹரிஷியின் தனி சந்திதியும், உற்சவமூர்த்தியும் உள்ளன. வைகானாச ஆகமம், விஷ்ணு கோயில்களின் வழிபாட்டு முறைகள், கட்டுமான விதிகள் ஆகியவற்றை வழங்கியவர் இவரே ஆவார். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வைகானாச மஹரிஷிக்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.
ஒரு கப்பலில் பயன்படுத்தப்பட்ட உலோக ஆணிகளை உருக்கியெடுத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் வைஷ்ணவ குரு வேதாந்த தேசிகரின் பிரத்யேக விக்ரகம், கோயில் மண்டபத்தில் வைத்து வழிபடப்படுகிறது. கோயில் சுவரில் சில முக்கியமான, வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 1242-ஆம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு, மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்துடன் (கி.பி.1216-1242) தொடர்புடையதாகும். மற்றொரு கல்வெட்டு, காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தெலுங்கு சோட வம்சத்தைச் சேர்ந்த அரசன் பற்றியதாகும்.
வழிபாட்டு முறை வைகானாச ஆகமத்தின்படி இந்தக் கோயில் கட்டுமானமும், வழிபாடும் அமைந்துள்ளது.
விமானத்தின் பெயர் கர்ப்ப கிரகத்தின் மேல் உள்ள விமானத்தின் பெயர் புண்யகோட்டி விமானம்.
அரிய சந்நிதி இங்கு வைகானாச மஹரிஷியின் அரிய சந்நிதி உள்ளது.
பிரத்யேக விக்ரகம் இக்கோயிலில் வேதாந்த தேசிகரின் பிரத்யேக விக்ரகமும் உள்ளது.
அமைவிடம் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில், செங்கல்பட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில், பாலாறு நதி அருகே ஆத்தூர் கிராமம் அமைந்துள்ளது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் - கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்
தமிழில்: பிரவீண்