கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் "ஜூலியாஸ் எய்ஸ்'. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய இப்படம் இந்தியாவிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து புது சாதனையை நிகழ்த்தியது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. தற்போது இந்தப் படம் இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து இயக்கவுள்ளார். கபீர் லால் "பர்தேஸ்', "அப்னே', "வெல்கம் பேக்' போன்ற இந்தி படங்களிலும், "ஆதித்ய 369', "பைரவ தீபம் அந்தரிவாடு' போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும் தமிழில் "மைக்கேல் மதன காமராஜன்' படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ள இவர், தற்போது இயக்குநராக பணியாற்றவுள்ளார்.
கபீர் லால் பேசும்போது, " நல்ல படத்தை தென்னிந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இதை ரீமேக் செய்கிறோம். விரைவில் வேலைகள் தொடங்கவுள்ளன'' என்றார்.