இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்கும் உதவிடும் வகையில் குறைந்த விலையில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை திருச்சியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் கண்டுபிடித்துள்ளார். ரூ.500 விலையில் புல்லட் புரூஃப் எனும் குண்டு துளைக்காத மற்றும் தீயில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஆடை, ரூ.300 விலையில் வெடி குண்டுகளை கண்டறியும் ஷூ (காலணி) ஆகியவற்றை தயாரித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் கிடைக்கும் சென்சார் ஜிப், பேட்டரி, ஒயர்களை கொண்டு இந்த ஷூவை வடிவமைத்துள்ளார். இதேபோல, இரும்புத் தகடு, மர அட்டை, தோல் ஆகியவற்றைக் கொண்டே புல்லட் புரூஃப் ஆடையை வடிவமைத்துள்ளார். திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயாலஜி பிரிவில் பயிலும் அல்அமீன் பரீத் என்ற மாணவரே இந்த கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இனி, அவரே தொடருகிறார்:
""நம் தாய் திருநாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு பல்வேறு இன்னல்கள் உள்ளன. அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது. முப்படை வீரர்களுக்காக பல லட்சங்கள், கோடிகளில் செலவிடும் நிலையில், சந்தையில் கிடைக்கும் எளிய பொருள்களை கொண்டே உயிரைக் காக்கும் ஆடைகளையும், காலணிகளையும் வடிவமைத்துவிடலாம் என்பதை கண்டறிந்தேன். அந்த வழியில் விளைந்ததே புல்லட் புரூஃப் மற்றும் கன்னி வெடி கண்டறியும் காலணி. இந்த புதிய கண்டுபிடிப்பை ஊக்குவித்தால் முப்படையில் பணியாற்றும் அனைத்து வீரர்களுக்கும் புல்லட் புரூஃப் ஆடை வழங்குவது சாத்தியமாகும். ஏனெனில், இந்த ஆடையில் சந்தையில் கிடைக்கும் சாதாரண இரும்புத் தகடு, மர அட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக 4 அடுக்குகளில் அடுக்கி வைத்துள்ளேன். அதன் மீது தோல் ஆடை பிணைத்து இந்த புல்லட் புரூஃப் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை வடிவமைக்க ரூ.500 மட்டுமே செலவிட்டேன்.
பட்டாக் கத்தியால் குத்தினாலும், இரும்பு சுத்தியால் அடித்தாலும் இந்த உடைக்கு ஒன்றும் ஆகாது. குண்டுகளும் துளைக்க இயலாது. அதுமட்டுமின்றி நெருப்பு பற்றினால் அதனுடே இந்த ஆடையுடன் சென்றால் தற்காத்துக் கொள்ள முடியும்.
இதேபோல, பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் மற்றும் இதர வகை குண்டுகள் மீது கால் வைப்பதால் ஏற்படும் உயிரிழப்பை முன்னரே கண்டறிந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது கண்ணி வெடி கண்டறியும் காலணி. இந்தவகை காலணியில் சென்சார் சிப் பொருத்தப்பட்டிருக்கும்.
அலாய், பிளாஸ்டிக், மெட்டல் என எந்த வகையான குண்டுகளாக இருந்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இந்த காலணியை அணிந்து செல்லும் வீரர்களுக்கு எச்சரிக்கை ஒலி கிடைத்துவிடும்.
இந்த காலணியை வடிவமைக்க ரூ.300 மட்டுமே செலவானது. எனது கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் உரிய ஸ்பான்ஸர் கிடைத்தால், இன்னும் பல மாதிரிகள் உள்ளன.
அவற்றை மனித சமுதாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் வெளிக்கொணர முடியும். பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்களுக்கு தற்காப்புக் கருவியாக கையடக்க நெருப்பு உமிழும் கருவி, ரூ.20 ஆயிரம் செலவில் சிறிய செயற்கை கோள், ரூ.8 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிள் என பல திட்டங்கள் உள்ளன'' என்கிறார் அல்அமீன் பரீத்.
படங்கள் : எஸ். அருண்.