நாட்டுப் புறங்களில் வசிக்கும் முதியோர்களில் பலர், சாப்பாட்டின் இறுதியில் வெல்லம் சாப்பிடுவர். இப்படி சாப்பிடுவதால் என்ன நன்மை என ஒரு பெரியவரிடம் கேட்டேன். ஜீரண சக்தியை அதிகரித்து, சாப்பிட்டதை எளிதல் ஜீரணிக்க வைத்துவிடும். ஆக வெல்லத்திற்கும் ஆப்பிள் போன்றே, டாக்டரை கிட்டே நெருங்க விடாத குணம் உண்டு என அறிந்தேன்.
இனிவெல்லம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்:
தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆசியா மற்றும் அமெரிக்கப் பகுதியில் வெல்லம் பயன்படுத்துபவர்கள் அதிகம்.
உண்மையில் வெல்லம் என்பது பதனிடப்படாத சர்க்கரைதான்.
இந்தியாவில் குறைந்தது 3000 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஒரு பண்டம்.
கரும்புச்சாறு அல்லது பனைப் பானகத்தை 200 டிகிரி அளவுக்கு கொதிநிலையில் வைத்து நீரை ஆவியாக்கினால் வெல்லம் கிடைக்கிறது. இதனை உருட்டினால் உருண்டை வெல்லம். அச்சில் வார்த்து எடுத்தால் அச்சு வெல்லம்.
பல இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்தான் சேர்ப்பர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பாயசம்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், திருமண ஜோடிகள் பரஸ்பரம் தலையில் வெல்லத்தை வைத்து வணங்குவார்கள். வெல்லம் போல இனிப்பாக வாழ்வை என்றென்றும் தொடருவோம் என்பது இதன் பொருளாகும்.
"சாகோ' என்ற பனைமரத்தின் பனை வெல்லம் கூடுதல் சுவையுடன் இருக்கும். இலங்கையில் பாகு நிலையிலேயே பயன்படுத்தி அதனை "பாகுதேன்' எனவும் கருப்பட்டியை "கற்பகக் கட்டி' எனவும் அழைப்பர்.
வெல்லம் வாதம் மற்றும் செரிமானத்திற்கு நல்லது. நுரையீரலில் ஏற்படும் சிதைவை தடுத்து காப்பாற்றும் திறன் கொண்டது.
பனை வெல்லத்தை, வட இந்தியாவில் "குர்' என அழைப்பர்.
மெலிந்த குழந்தைகள் தேற பனை வெல்லம் சிறந்தது. இதேபோன்று கர்ப்பிணிகள், குழந்தை பிறந்தவர்களும் கருப்பட்டி சாப்பிடுவது மிகவும் நல்லது. ரத்த நாளங்களை சுத்தப்படுத்தும்.
வெல்லத்தில் ஜிங்க் (ழஐசஇ) மற்றும் செலினியம் உள்ளது. இது தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் கூட்டுகிறது.
வெல்லம் மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. காய்ச்சியப்பாலில், வெல்லத்தைப் போட்டு குடித்தால், எலும்புகள் வலுப்படும். மூட்டுவலிக்கு "குட் பை' சொல்லலாம்.
தோல் சுருங்குதல், பளபளப்பு குறைதல் ஆகியவை மாற, வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள் வெல்லம் சாப்பிட்டு வர பிரச்னைகள் மட்டுப்படும். ஆக வெல்லமும் அருமருத்து என உணர்ந்து, அளவாக பயன்படுத்தினால் இளமையாக வாழலாம்.