ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு

2019 -ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு

2019 -ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் பொறி 1806-இல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம். 1857-இல் உபி மீரட்டில் நடந்த சிப்பாய் கலகம் இரண்டாவது பொறி. மூன்றாவது பொறி ஜாலியன் வாலாபாக் படுகொலை.
 பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இருக்கும் பொற்கோயிலுக்கு மிக அருகில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன் வாலாபாக் பூங்கா அமைந்துள்ளது.
 பஞ்சாப் மன்னரான மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவரது குடும்பம் "ஜல்லா' என்ற சிற்றூரில் இருந்து வந்ததால் ஜாலியன் வாலாபாக் என்று பெயர் பெற்றது. 13 ஏப்ரல் 1919 - அன்று ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் கூடியிருந்தனர். அவர்கள் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டயர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 ரவுண்டு துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பதிவானது. இந்த படுகொலையில் இறந்தவர்கள் சுமார் 379 பேர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இதில் அடக்கம். மேலும் 1110 பேர் படுகாயம் அடைந்தனர்.
 இப்படுகொலையில் இறந்த இந்திய விடுதலை தியாகிகளை நினைவு கூறும் வகையில் இத்தோட்டத்தை 1951-ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இறந்த தியாகிகளுக்கு இத்தோட்டத்தில் நினைவுச் சின்னமும் எழுப்பியுள்ளது.
 இந்த ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கில அடக்கு முறைகளால் மனம் குமுறிக் கொண்டிருந்த இந்தியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ரெüலட் சட்டம், உணவுப் பொருள்களின் விலை இரட்டிப்பான கொடுமை எல்லாம் சேர்ந்து இந்தியர்களிடையே ஆங்கிலேயர்கள் மீது கோபத்தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

9 ஏப்ரல் 1919 ராம நவமி . அந்த கொண்டாட்டத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிரான இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிரகடனப்படுத்த ஒன்று சேர்ந்தனர். தேசிய ஐக்கிய தினமாகக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தூண்டுகோலாகவும் அமைப்பாளராகவும் இருந்தவர்கள் டாக்டர் ஸைஃபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்தியபால். இந்த மகா ஒற்றுமை மூன்றாம் சிப்பாய் கலகமாக மாறும் என்று கருதி, கூட்டத்தில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்தியபால் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
 இரண்டாம் கட்ட தலைவர்களைக் கொண்டு மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஹிந்துக்கள் இஸ்லாமியருக்கு நெற்றியில் திலகம் வைக்க, இஸ்லாமியர்கள் ஹிந்து நண்பர்களுக்கு தலையில் தொப்பி சூட்டி மகிழ்ந்தனர். ஊர்வலத்தில் மகாத்மா காந்தி வாழ்க.. கிச்லு வாழ்க.. சத்தியபால் வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அமிர்தசரஸ் நகரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். ஜெனரல் டயர் உட்பட ஆங்கில அதிகாரிகள் வெகுண்டு எழுந்தனர்.
 டாக்டர் ஸைஃபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்தியபால் இருவரும் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டனர். இருந்தாலும் கைது குறித்த செய்தி வெளியாகி பூகம்பமாக வெடித்தது. மக்கள் ஆவேசத்துடன் திரண்டு துணை கமிஷனர் இல்லம் நோக்கி விரைய. அவர்களைத் தடுத்து நிறுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இருபத்தி நான்கு பேர்கள் கொல்லப்பட.. அநேகர் காயமுற்றார்கள். அவர்களுக்குத் தாமதமாக மருத்துவ சிகிச்சை தரப்பட்டது. ஆங்கிலேய நர்ஸ் இந்தியர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்தார்கள் என்று சொல்ல.. அவரைத் தாக்க அங்கிருந்தவர்கள் முற்பட சக ஆங்கிலேயர் அந்த நர்ûஸ காத்து அழைத்துச் சென்றார். கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்களில் சிலர் ஒரு ஆங்கிலப் பெண்மணியையும், சில ஆங்கில அதிகாரிகளையும் கொன்றனர். அரசு அலுவலகங்கள் பல தாக்குதல்களுக்கு உள்ளாயின.
 காலங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அந்தத் தாக்குதல் ஏற்படுத்திய வடு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஆறாத வடுவாக இருக்கிறது.
 - பிஸ்மி பரிணாமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com