"பச்சை என்கிற காத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய கீரா அடுத்து இயக்கி வரும் படம் "பற.' சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். சிபின் சிவன் ஒளிப்பதிவில் ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கிறார். பெவின்ஸ் பால், ராமச்சந்திரன், ரிஷி கணேஷ் தயாரிக்கின்றனர். கீரா படம் பற்றிப் பேசும் போது... "இந்தக் கதையின் எல்லாக் காட்சிகளும் போய் முடிவது மனிதத்தின் வாசலில்தான். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். திலீபன் -அனிதா என்று ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி. நிலமற்ற இன்னொரு காதல் ஜோடி ஸ்ரீபன் - ஆராயி, தங்களின் அங்கீகாரத்துக்காகத் திருமணம் செய்ய முயல்கிறார்கள். வயதாகி துணையில்லாத முத்துக்குமரன்- ஆயிஷா எனும் முதிய ஜோடிக்கும் திருமணம். அந்தப் பகுதி ரவுடியான பட்டாக்கத்தி, வழக்கறிஞர் அம்பேத்கர் இந்த ஐந்து புள்ளிகளும் சந்திக்கும் இடம் ஒரு பதிவு அலுவலகம். அங்கு அவர்களுக்கு நேர்ந்தது என்ன, அதிலுள்ள சுவாரஸ்யம் என்ன என்பதே திரைக்கதை. ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சமூக விடுதலை என்பது தேவையாக இருக்கிறது. அழகு, நிறம், பணம் என்று அன்றாட அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன்வைக்கிற இடம் அது. மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம் என்று உணர்கிற இடங்கள் ஆங்காங்கே வரும். அதுதான் இந்தக் கதையின் பலம் என்று நினைக்கிறேன்'' என்றார் கீரா.