படத் தயாரிப்பு, இயக்கம், விநியோகம் என பன்முகங்களைக் கொண்டவர் கேயார். சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் ஏராளமானப் படங்களை வெளியிட்டவர். சமீபத்தில் ஷங்கரின் "ஐ,' "பாகுபலி" படத்தின் இரண்டு பாகங்களை வெளியிட்டு பெரும் வசூல் ஈட்டினார். இந்த நிலையில் "ஆயிரம் பொற்காசுகள்" என்றப் படத்தை வெளியிட இருக்கிறார். ஜி.ஆர்.எம். ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தைப் பார்த்த கேயார், அப்படத்தின் கதைக்கரு மற்றும் பட உருவாக்கம் பிடித்துப் போனதால், அதை வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார். பூபதி பாண்டியனின் உதவியாளர் ரவி முருகையா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். விதார்த், ஜானவிகா, சரவணன், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதிகண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிராமத்து வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது இக்கதை. தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் கிடைக்கும் சோழர் கால புதையலை அந்த கிராமத்து மக்கள் பங்கு பிரித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் உண்டாகும் சுவாரஸ்யங்களும், பிரச்னைகளுமே திரைக்கதை. மே மாத வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.