சாதனை புரிவதற்கு கல்வித்தகுதி தேவையில்லை என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற அருண் கேசவன் இப்போது சிலம்பக்கலையை பயிற்றுவிக்கும் ஆசானாகத் திகழ்கிறார். சென்னை குரோம்பேட்டை அருகே சிலம்பக்கலையை கற்பிக்கும் இவரிடம் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
சிலம்ப சம்மேளனம் அமைப்பில் "டிப்ளமோ' பட்டம் பெற்ற கேசவன், சிலம்பக்கலையில் 8- ஆவது கறுப்பு பட்டை அங்கீகாரத்தையும், கராத்தே கலையில் 5-ஆவது கறுப்புப்பட்டை அங்கீகாரத்தையும் பெற்றவர் .
"தமிழ்நாட்டில் இக்கலையை சொல்லிக் கொடுக்க பல அமைப்புகள் உள்ளன. ஆனால், நான் ஏற்படுத்திய அமைப்பிற்கு "ஆசான் துரோணர் சிலம்பம் அகாதெமி' என்று பெயர் வைத்தேன். பாண்டவர்களை போர்க்கலையில் பரிமளிக்கச் செய்ததற்கு துரோணர் தான் காரணம் என்பதால் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன். இப்பயிற்சியின் மூலம் மாணவர்களிடம் நேரம் தவறாமை, பயிற்சி தொடங்கும் முன் இறை குருவந்தனம், தவறுகளை திருத்தி சரியாக செய்யும் பயிற்சி போன்றவற்றை போதித்து வருகிறேன்'' என்கிறார் கேசவன்
இவரது அகாதெமி மாணவர்கள் 2015-ஆம் ஆண்டு மலேசியாவிலும், 2017-ஆம் ஆண்டு இலங்கையிலும் நடந்த சிலம்ப போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்கள்.
- எஸ். வெங்கட்ராமன்