ஸரோமி மூவி கார்லேண்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரூட்டு'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை புதுமுகம் ஏ.சி. மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா நடிக்கின்றனர். மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் பிரபு இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""இந்தப்படத்தை முதலில் வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. இடையில் சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலகிவிட, அந்த நேரத்தில் என்னிடம் உதவி இயக்குநராக இருந்த தங்கப்பாண்டி தான், "இது அருமையான படம் இதை கிடப்பில் போட்டு விடக்கூடாது' என கூறி தன்னுடைய சக்திக்கு மீறி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். அதேபோல இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர், முதல் நாள் படப்பிடிப்பில் திடீரென வர முடியாது என கூறி விட, குறைந்த கால அவகாசத்தில் கதாநாயகியாக இந்த படத்திற்குள் வந்தவர் தான் மதுமிதா ஆனாலும் முதல் நாளிலேயே அவருடைய தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்து விட்டார். சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஓர் இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சாலைகள் மேம்பாடு, துரித போக்குவரத்து என்று பல கட்டமைப்புகள் இருந்தாலும், பயண நேரம் என்பது கடந்து கொண்டே இருக்கிறது. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரியில் படம் திரைக்கு வரவுள்ளது'' என்றார் இயக்குநர்.