கென்யா நாட்டு நாடோடிக்கதை: ஏழைக்கு என்ன கொடுப்பீர்?
அந்த கிராமத்தில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்வதே தன் கடமை என்று நினைத்தார். தன் செல்வத்தையெல்லாம் அவர்களுக்காகச் செலவு செய்தார்.
தாம் ஏழையான பிறகும் அவர் ஏழைகளுக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. அந்த ஊரில் இருந்த செல்வந்தர், ஒவ்வொரு வீடாகச் சென்று உதவி கேட்டார். அவரின் இயல்பை அறிந்திருந்த அவர்களும் அவருக்குத் தாராளமாக உதவிகளை செய்தனர்.
ஒரு முறை அவர், ஊரிலுள்ள மற்றொரு செல்வந்aதரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே அந்த செல்வந்தர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
செல்வந்தரை பார்த்து, "ஏழை பெண்ணுக்காக உங்கள் உதவியை நாடி வந்தேன்' என்றார் அவர்.
"இன்று என்னால் ஏதும் தர இயலாது'
"தயவு செய்து நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. தன் கைகளையே நம்பி கூலி வேலை செய்து வாழும் பெண் அவள். ஏணியிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டாள். அந்த ஏழைத்தாயின் குழந்தை பசியால் வாடுகிறது. உதவி செய்யுங்கள்' என்றார்.
"என்னால் இன்று இயலாது என்று சொன்னேனே"
"ஐயா நீங்கள் நல்லவர். இந்தச் சூழலில் உதவி செய்தே ஆக வேண்டும்'
"நான் தான் என்னால் இயலாது என்று சொல்லிவிட்டேனே! எனக்கு தொல்லை தராதீர்கள்' என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார் செல்வந்தர்.
செல்வந்தரை தொடர்ந்து உதவி கேட்ட வரும் அறைக்குள் சென்றார்.
"ஐயா உதவி செய்யுங்கள்' என்று தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்.
கோபம் கொண்ட செல்வந்தர் அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை ஊர் மக்கள் அறிந்தால் என்னென்ன தொல்லைகள் நேரிடுமோ?
ஐயோ! கோபத்தில் என்ன தவறு செய்து விட்டோம். எப்படிப்பட்ட பெரியவரை அடித்துவிட்டோம். ஊருக்குத் தெரிந்தால் நம் நிலை என்னவாகும்? என்று அஞ்சினார் அந்த செல்வந்தர்.
வலி தாங்க முடியாமல் தம் கன்னத்தைத் தடவிய அவர், "எனக்கு அறை கொடுத்துவிட்டீர்கள். அந்த ஏழைக்கு என்ன தருவீர்கள்' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
அவரின் காலில் விழுந்த செல்வந்தர், "என்னை மன்னித்து விடுங்கள்' என்று சொல்லி பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்.