Enable Javscript for better performance
சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும்!

    By   |   Published On : 26th May 2019 07:52 AM  |   Last Updated : 27th May 2019 10:30 AM  |  அ+அ அ-  |  

    thozlar_venkatesan_2

    "வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்களைத் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.'' - நம்பிக்கை கரம் நீட்டுகிறார் இயக்குநர் மகா சிவன். இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர். "தோழர் வெங்கடேசன்' படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார்.
     "தோழர் வெங்கடேசன்' தலைப்புக்கு பொருள் தருகிற விதம் வேறு மாதிரி இருக்கிறது... அரசியல் படமா...
     அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. தோழர் என்ற வார்த்தை வந்து சேர்ந்ததும் கதை இன்னும் பொருத்தமாக மாறிப் போனது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த ஒரு பெண், அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்த கதை. அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.
     
     கதையின் பேசு பொருள் சொன்னால், கொஞ்சம் தெளிவு கிடைக்கும்...
     காஞ்சிபுரத்தில் சோடா தயாரித்து கடைக்கு கடை போடுகிற ஒரு சாமானியன் ஒருவன். அங்கேயே தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்திருக்கும் ஒரு பெண். இந்த இரண்டு பேருக்கும் காதல். அவர்களுக்குள் நிரம்பி கிடப்பது எல்லாமே அன்பு, நேசம். அப்போது திடீரென்று ஒரு விபத்து. அரசு பேருந்து ஒன்று கட்டுபாட்டை இழக்க, அவன் விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழக்கிறான். அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்பதால், நஷ்ட ஈடு வாங்குவதற்குள் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிறது. வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அரசு பேருந்தை ஜப்தி செய்து அதை பாதிக்கப்பட்ட அவனிடம் ஒப்படைக்கிறது. அந்த பேருந்தை வைத்துக் கொண்டு அவன் படும் பாடுகள், அந்த எளிமையான காதல் எல்லாமும் கதை. இதைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் மேல் இருக்கிற நம்பிக்கை போகும். இன்னும் எத்தனை காலம்தான் எதற்கும் ஆகாத இந்த சட்டங்களை வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கத் தோன்றும். அதை விட வாழ்க்கையின் மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும். அப்படி வாழ்க்கையில் நடக்கிறதை, நடந்ததைத்தான் எடுத்திருக்கேன். நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடக்கிறதை படமாக எடுத்திருக்கிறேன்.
     
     மீண்டும் ஒரு அரசியல் விமர்சன படம்...
     மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை.
     அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளை கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை.
     ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஓர் உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.
     
     எல்லோரும் புதுமுகங்களா...
     அதுதான் எனக்குத் தேவைப்பட்டது. சினிமாவுக்குப் பழக்கமான முகமாக இருந்தாலும் எனக்கு சரியாகப்பட வேண்டும் அந்த முகம். அந்த முறையில் ஹரி சங்கர் ஒரு புதுமுகம்தான். ஆனால் சினிமா வேட்கை உள்ள இளைஞன். அந்த அற்புத காதலி மோனிகா. ஏற்கெனவே "ஜீனியஸ்' படத்தில் நடித்த அறிமுகம் அவருக்கு உண்டு. மற்ற கதாபாத்திரங்களிலும் பெரும்பாலும் புதுமுகங்களே இருக்கிறார்கள். எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அதற்கு இந்த நடிகர்களே எனக்கு போதுமானவர்கள். எல்லோரும் இயல்பான நடிப்பில் ஈர்ப்பார்கள். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடும் சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகாக இருக்கும்.
     - ஜி.அசோக்
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp