'ஏமாலி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சாம் ஜோன்ஸ். அந்தப் படத்தில் நன்றாக குறிப்பிடத்தகுந்த பாராட்டுதல்களைப் பெற்ற இவர், அடுத்து "லிசா', "தர்மபிரபு' என இரு படங்களில் நடித்து வருகிறார். "லிசா' இந்த வாரம் வெளியான நிலையில் "தர்ம பிரபு' அடுத்த மாதம் வெளியாகிறது. அடுத்தடுத்த படங்கள் குறித்து அவரிடம் பேசுகையில்..
"லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் எனக்கு. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். "ஏமாலி' படத்தின் மூலம் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்.
முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது லிசாவில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அதன் பின் நடப்பதே கதை. அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். "தர்மபிரபு' ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. வித்தியாசமான நகைச்சுவை திரைப்படம் அது.அடுத்தது இரண்டு முன்னணி இயக்குநர்களுடன் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஜய் சேதுபதி, சிவகார்த்திக்கேயன் இருவரின் பாணியும் பிடிக்கும்'' என்றார் ஜோன்ஸ்.