உலக அளவில் அதிகமாகச் சைக்கிள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது நெதர்லாந்து. இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும், மூன்றாவது இடத்தை பெல்ஜியம் பிடித்துள்ளது. நமது தலைநகரம் தில்லி 79- ஆவது இடத்தில் உள்ளது.
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே, அங்கு வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக சைக்கிளை பயன்படுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதோடு, சைக்கிள் பகிர்வு திட்டம் அங்கு தொடங்கப்பட உள்ளது. டெல்லி முழுவதும் 50 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் 10 முதல் 20 சைக்கிள்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என்ற கட்டண அடிப்படையில் அந்த சைக்கிள்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பின்னர், ஏதேனும் ஒரு சைக்கிள் மையத்தில் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும். நமது சென்னையில் உள்ள "ஸ்மார்ட் பைக்' திட்டத்தைப் போன்றது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி காற்று மாசு கட்டுப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது.
ஒரு பக்கம் காற்று மாசு மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் நீரழிவு நோய். இந்தியாவில் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9.8 கோடியாக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அதிலும், டைப் 2 எனப்படும் நாற்பது வயதிலேயே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றன.
உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்கத்தில் மாற்றம், நகரமயமாக்கல் போன்றவற்றால் அடுத்த 12 ஆண்டுகளில் , இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்போதே சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி என முந்திக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்!