திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலை அடுத்துள்ளது புளியங்குடி கிராமம். இந்த ஊரில் கோமதி நாயகம் என்ற பெயரைச் சொன்னால் தெரியாத நபர்களே கிடையாது. காரணம் இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர் மட்டுமல்ல பல விவசாயிகளின் வழிகாட்டி. ஊரையே பசுமையாக்கிய பெருமைக்குரியவர். விவசாயத்துறை வல்லுநரான ஆர்.எஸ். நாராயணன் இவரைப் புளியங்குடி நம்மாழ்வார் என்று சொல்லி அழைப்பதுண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புளியங்குடி புழுதிபறக்கும் நகரமாக இருந்துவந்தது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியின் காரணமாக புளியங்குடி நகரத் தெருக்களெங்கும் பசுமையான மரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் குறைந்தது ஒரு மரம் என்கிற வகையில் புளியங்குடி, சிந்தாமணி என ஊரின் பல பகுதிகள் இப்போது பசுமையாய் இருக்கின்றன. அதற்கு காரணம் கோமதி நாயகம் தான். ஆண்டு தோறும் 5000 மரக்கன்றுகளை பள்ளி மாணவர் மாணவியர் மூலம் தெருக்களில் நட்டு வளர்க்கும் பணியை செய்து வருகிறார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக புளியங்குடி விவசாய சேவா சங்கத்தின் பொறுப்பாளராக தனது அயராத உழைப்பாலும், தெளிந்த சிந்தனையாலும் அப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் பல்வேறு செயல் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும், 87 வயது இளைஞர் இயற்கை உழவர் பி. கோமதிநாயகம்.
- ராஜன்