Enable Javscript for better performance
அக்கம்பக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அக்கம்பக்கம்

    By DIN  |   Published On : 01st September 2019 12:00 AM  |   Last Updated : 01st September 2019 12:00 AM  |  அ+அ அ-  |  

    sk4

    காஷ்மீர் பள்ளத்தாக்கு

    ஜம்மு காஷ்மீர் 1846-ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை நூறு அண்டுகள் நான்கு மன்னர்களால் ஆளப்பட்டது. கடைசி மன்னர் ஹரி சிங். முதல் மன்னர் மகாராஜா குலாம் சிங். 1847-ஆம் ஆண்டு பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து காஷ்மீர் பகுதிகள் இவரது ஆளுகைக்குள் வந்தது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானால் சீனாவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட பகுதி "ஷாக்ஸ்காம்' பள்ளத்தாக்கு ஆகும்.

    1984-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் இந்தியப் படைகள்  நடத்திய ராணுவ நடவடிக்கை மூலம் சியாசென் பனிப்பிரதேசம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

    பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைநகரம் முஷாபராபாத்.
    உலகில் 8000 மீட்டருக்கு மேல் 14 மலைகள் உள்ளன. இவைகளை எண்ணாயிரங்கள் என அழைக்கின்றனர். இவைகளில் உள்ள மலைகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப்  பகுதியில் உள்ளன.

    தோஹ்ரா ஆட்சியின் போது லடாக் இரண்டு தலைநகரங்களால் ஆளப்பட்டது. கோடைக்காலத் தலைநகரம் "லே'. குளிர்காலத் தலைநகரம் "சகர்டு'.

    -க.ரவீந்திரன், ஈரோடு

     

    எழுதுவது எவ்விதம்?
    தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் இடப்பக்கமிருந்து வலது பக்கமாவும், உருதுமொழி வலது பக்கமிருந்து இடது பக்கமாகவும், சீன, ஜப்பான் மொழிகள் மேலிருந்து கீழாகவும், மெக்சிகோ மொழி கீழ் இருந்து மேல் நோக்கியும் எழுதப்படுகின்றன.

    விடுமுறை பலவிதம்

    நமக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக இருப்பது போல், கிரீஸ் நாட்டில் திங்கட்கிழமையும், பாரசீக நாட்டில் செவ்வாய்க்கிழமையும், சிரியா நாட்டில் புதன் கிழமையும், எகிப்தில் வியாழக்கிழமையும், ஐக்கிய அரபு நாடு
    களில் வெள்ளிக்கிழமையும், இஸ்ரேலில் சனிக்கிழமையும் வார விடுமுறை நாட்களாக உள்ளன.

    புழுவா? பூச்சியா?

    எங்கள் ஊரில் ஒரு பாட்டி இருந்தார். கல்யாணம் முடிந்த பெண்கள் யாரை
    யாவது கொஞ்ச நாள் இடைவெளியில் அந்தப் பாட்டி சந்தித்தால் ""என்னடியம்மா  வயித்துல ஏதாவது புழு, பூச்சி உண்டா?'' என்று தான் விசாரிப்பார். ஒரு தடவை இதே மாதரி ஒரு புதுப்பெண்ணை விசாரித்தார். அதற்கு அந்தப் பெண்ணோ ""ஏன் பாட்டி குழந்தைனு ஏதும் உண்டாகி இருக்கிறாயா? என்று கேளேன். புழு, பூச்சி உண்டா என்ற கேட்கிறாயே?'' என்று திருப்பிக் கேட்டார்.

    அதற்கு அந்தப் பாட்டி ""புழு, பூச்சி என்று சொன்னால் அதுல எல்லாமே அடங்கி இருக்கு. புழு என்று சொன்னால் அது கிடந்த இடத்திலேயே கிடந்து ஆட்களைக் குடைந்து கொண்டே இருக்குமில்லையா? அதனால் ஆண் குழந்தையா என்பதை அப்படிக் கேட்கிறோம்

    பூச்சி என்றால் கொஞ்சநாளில் பறந்து விடும். அதை மனசுல வச்சு, பெண் குழந்தையா என அவ்வாறு கேட்கிறோம்'' என்று பாட்டி விளக்கம் கூறியதும், அந்தப் பெண் வியப்பாகிப் போனார்.

    செவ்வாய் தோஷம்

    தமிழ்த்தென்றல் திரு.வி.க. காரைக்குடி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் மன்றத்திற்குத் தலைமையுரை நிகழ்த்தச் சென்ற நேரத்தில் அப்பள்ளியிலுள்ள பெண்கள் அவரைச் கண்டதும், "திரு.வி.க வாழ்க திரு.வி.க.. வாழ்க'  என்று வாழ்த்தி வரவேற்றனர். மேடையில் திரு.வி..க பேசத் தொடங்கியதும் "எனக்கு சோதிடன் செவ்வாய் தோஷம் உள்ளது என்றான். இத்தனை செவ்"வாய்' பெண்கள் என்னை வாழ்த்தும் பொழுது அந்த ஒரு செவ்வாய் என்னை என்ன செய்துவிடும்?' என்றார். 

     -சி. ரகுபதி போளூர்

    தீர்ப்பு

    ஒருவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

    குற்றம் சாட்டப்பட்ட வழக்குரைஞர் எழுந்து "மைலார்ட் இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப்போகிறார். நீங்கள் அதைப்பார்த்த பின்பு இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்'  என்று கூறி அமர்ந்துவிட்டார்.

    நீதிபதி உள்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தனர். 5 நிமிடத்தில், 1 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்குரைஞர் எழுந்தார். 

    "மைலார்ட், நீங்கள் உள்பட யாருமே காணாமல் போனவர், கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால் தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

    பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார். வழக்குரைஞர் எழுந்து "எப்படி மைலார்ட்' என்றார்.

    அதற்கு நீதிபதி சொன்னார். " பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான் ஆனால்,  ஒரு தடவை கூட குற்றம் சாட்டபட்டவர் வாசலைப் பார்க்கவில்லையே' என்றார்.

    - "படித்ததில் பிடித்தது' மா.உலகநாதன் திருநீலக்குடி 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp